
மாணவர்களே அலெர்ட்; அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்ப காலக்கெடு நீட்டிப்பு
செய்தி முன்னோட்டம்
அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளில் சேர்வதற்கான இணையதள விண்ணப்பப்பதிவு காலக்கெடு, செப்டம்பர் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் அதிக அளவில் உயர்கல்வி படிக்க ஆர்வம் காட்டுவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, உயர்கல்வித்துறை அமைச்சர் கோ.வி.செழியன் தெரிவித்தார். புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன், நான் முதல்வன் போன்ற திட்டங்கள், மாணவர்களிடையே உயர்கல்வி மீதான ஆர்வத்தை அதிகரித்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார். மாணவர்களின் தேவைக்கேற்ப, இந்த ஆண்டு 15 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், அரசு கல்லூரி இல்லாத பகுதிகளில் தொடங்கப்பட்டுள்ளன.
இடங்கள்
இடங்கள் அதிகரிப்பு
மேலும், பல்வேறு பாடப்பிரிவுகளில் கூடுதலாக 15,000 க்கும் மேற்பட்ட மாணவர் சேர்க்கை இடங்கள் உருவாக்கப்பட்டிருப்பதாகவும் உயர்கல்வித்துறை அமைச்சர் கோ.வி.செழியன் தெரிவித்தார். இந்தத் திட்டங்களால், உயர்கல்விக்கான ஆர்வம் அதிகரித்துள்ளது. விண்ணப்பிக்கத் தவறிய மாணவர்களுக்கும் வாய்ப்பளிக்க வேண்டும் என்ற நோக்கில், விண்ணப்ப கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கு, செப்டம்பர் 30 ஆம் தேதி வரை இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இந்த நீட்டிப்பு, அரசு கலைக் கல்லூரிகளில் சேர முயற்சி செய்து வரும் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்குப் பயனளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.