Loading...
சென்னையில் உருவாகும் GCC காரிடார்! ₹1,000 கோடி முதலீட்டில் 2,600 புதிய வேலைவாய்ப்புகள்; தமிழ்நாடு அரசு புதிய ஒப்பந்தம்
சென்னையில் உருவாகும் GCC காரிடார்

சென்னையில் உருவாகும் GCC காரிடார்! ₹1,000 கோடி முதலீட்டில் 2,600 புதிய வேலைவாய்ப்புகள்; தமிழ்நாடு அரசு புதிய ஒப்பந்தம்

எழுதியவர் Sekar Chinnappan
Sep 14, 2026
08:28 pm

செய்தி முன்னோட்டம்

தமிழ்நாட்டை தொழில்நுட்பம் மற்றும் தொழில் துறையில் சர்வதேச அளவில் முன்னிலைப்படுத்தும் நோக்கில், இரண்டு புதிய உலகளாவிய திறன் மையங்களை (GCC) நிறுவுவதற்கும் விரிவுபடுத்துவதற்கும் ₹1,000 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. முதலமைச்சர் அவர்களின் முன்னிலையில் அதிகாரப்பூர்வமாக பரிமாறிக் கொள்ளப்பட்ட இந்த ஒப்பந்தங்கள் மூலம் 2,600க்கும் மேற்பட்ட உயர் மதிப்புடைய புதிய வேலைவாய்ப்புகள் உருவாகவுள்ளன.

GCC காரிடார்

சென்னை மவுண்ட் பூந்தமல்லி சாலையில் அமையவுள்ள புதிய GCC காரிடார்

முதலாவது ஒப்பந்தத்தின்படி, இங்கிலாந்தை தலைமையிடமாகக் கொண்ட முன்னணி தகவல் தொடர்பு நிறுவனம் ஒன்று தமிழ்நாடு அரசின் வழிகாட்டி (Guidance Tamil Nadu) மற்றும் எர்ன்ஸ்ட் & யங் நிறுவனத்துடன் இணைந்து தனது புதிய திறன் மையத்தை அமைக்கவுள்ளது.

சென்னை மவுண்ட் பூந்தமல்லி சாலையில் புதிதாக உருவாக்கப்பட்டு வரும் GCC காரிடார் பகுதியில் ₹1,000 கோடி முதலீட்டில் அமையவிருக்கும் இப்புதிய மையம் மூலம் 2,000 உயர்தர வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.

விரிவாக்கம்

திருச்சி மற்றும் சென்னையில் ஸ்வீடன் நிறுவனத்தின் பிரமாண்ட விரிவாக்கம்

இரண்டாவது ஒப்பந்தமாக, ஸ்வீடன் நாட்டை சேர்ந்த சிக்மா டெக்னாலஜி குரூப் நிறுவனம் தனது இந்திய துணை நிறுவனமான ஸ்ரியா சொல்யூஷன்ஸ் மூலம் சென்னை மற்றும் திருச்சியில் உள்ள மையங்களை விரிவுபடுத்தவுள்ளது.

எம்பெடெட் சிஸ்டம்ஸ் மற்றும் தொழில்துறை டிஜிட்டல்மயமாக்கல் துறைகளில் கவனம் செலுத்தும் இத்திட்டம் மூலம் மேலும் 600 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.

ADVERTISEMENT

முதலீடுகள்

தமிழக பொருளாதாரத்தை உயர்த்தும் சர்வதேச முதலீடுகள்

தலைமை செயலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிக்மா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மைக்கேல் கார்ல்சன், ஸ்ரியா நிறுவன சி.இ.ஓ கிருஷ்ணா ராதாகிருஷ்ணன் மற்றும் தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் தீபக் ஜேக்கப் ஐஏஎஸ் ஆகியோர் ஒப்பந்தங்களைப் பரிமாறிக்கொண்டனர்.

இங்கிலாந்திற்கான இந்தியத் தூதர் குமரன் பெரியசாமி ஐஎஃப்எஸ் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்ற இந்நடவடிக்கை, தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்பு சந்தையை மேலும் விரிவுபடுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT