LOADING...
வதந்தியை நம்பி விபரீத முடிவு! தவெக பின்னடைவு என்ற பேச்சால் விஜய் ரசிகர் கழுத்தை அறுத்தார்: கிருஷ்ணகிரியில் பரபரப்பு
விஜய் பின்னடைவு என்ற பேச்சால் ரசிகர் கழுத்தை அறுத்தார்

வதந்தியை நம்பி விபரீத முடிவு! தவெக பின்னடைவு என்ற பேச்சால் விஜய் ரசிகர் கழுத்தை அறுத்தார்: கிருஷ்ணகிரியில் பரபரப்பு

எழுதியவர் Sekar Chinnappan
May 04, 2026
11:37 am

செய்தி முன்னோட்டம்

தமிழக சட்டசபை தேர்தல் 2026க்கான வாக்கு எண்ணிக்கை பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிர்ச்சியளிக்கும் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தேர்தலில் பின்னடைவைச் சந்திப்பதாக வெளியான வதந்திகளைக் கேட்டு, அவரது தீவிர ரசிகர் ஒருவர் கழுத்தை அறுத்துத் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் விஜய் ரசிகரின் விபரீத முடிவு

கிருஷ்ணகிரியைச் சேர்ந்த 28 வயதான கே. மகேந்திரன் என்ற வாலிபர், விஜயின் தீவிர ரசிகர் மற்றும் தவெக தொண்டர் எனக் கூறப்படுகிறது. வாக்கு எண்ணிக்கை தொடங்குவதற்கு சற்று முன்பாக, தேர்தல் முடிவுகள் குறித்த பல்வேறு வதந்திகள் பரவின. அதில், தவெக பின்னடைவைச் சந்திப்பதாக வெளியான தகவல்கள் மகேந்திரனை மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளன. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், தனது வீட்டின் அருகே கழுத்தை அறுத்துத் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

சிகிச்சை

உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை

ரத்தம் சொட்டச் சொட்ட கிடந்த மகேந்திரனைப் பார்த்த அப்பகுதி மக்கள், அவரை மீட்டு உடனடியாக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், தற்கொலை முயற்சிதிற்கான முழுமையான காரணங்கள் குறித்து விரிவான விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

தேர்தல் முடிவு

தேர்தல் முடிவுகளும் விஜய் ரசிகர்களின் எதிர்பார்ப்பும்

தமிழக அரசியலில் விஜய் தொடங்கிய தவெக கட்சி, இந்தத் தேர்தலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, அவர் போட்டியிடும் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளின் முடிவுகள் அரசியல் வட்டாரங்களில் மிக முக்கியமாகக் கவனிக்கப்படுகின்றன. ஆரம்பகட்ட தபால் வாக்கு எண்ணிக்கையில், விஜய் இரு தொகுதிகளிலும் முன்னிலை வகிப்பதாகத் தகவல்கள் வெளியாகின. தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியாகும் வரை வதந்திகளை நம்பி ரசிகர்கள் எந்தவிதமான தவறான முடிவுகளையும் எடுக்க வேண்டாம் எனத் தவெக நிர்வாகிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். உணர்ச்சிவசப்பட்டு உயிரை மாய்த்துக்கொள்ளும் முயற்சிகள் யாருக்கும் எவ்வித நன்மையையும் அளிக்காது என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். மகேந்திரன் விரைவில் குணமடைய ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

Advertisement