நீதித்துறையை அவமதிப்பதா? 8 ஆம் வகுப்பு பாடப்புத்தகத்திற்கு உச்ச நீதிமன்றம் தடை; என்சிஇஆர்டி இயக்குநருக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ்
செய்தி முன்னோட்டம்
தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் வெளியிட்டுள்ள சிபிஎஸ்இ 8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில், 'நீதித்துறையில் ஊழல்' என்ற தலைப்பில் ஒரு பகுதி இடம்பெற்றிருந்தது. இது தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணை நடத்திய உச்ச நீதிமன்றம், அந்தப் புத்தகத்தின் அனைத்துப் பிரதிகளையும் உடனடியாகப் பறிமுதல் செய்ய உத்தரவிட்டுள்ளது. இந்தியத் தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு, இந்தப் பாடப்பகுதியைச் சேர்த்தது நீதித்துறையின் பெயரைக் கெடுப்பதற்காகத் திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒரு ஆழமான சதி என்று கடுமையாக சாடியுள்ளது.
கண்டனம்
நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் மற்றும் கண்டனம்
இந்த விவகாரம் தொடர்பாக என்சிஇஆர்டி இயக்குநர் மற்றும் பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் ஆகியோருக்கு உச்சநீதிமன்றம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அவர்கள் மீது ஏன் குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையைத் தொடங்கக்கூடாது என்று கேள்வி எழுப்பியுள்ளது. மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரிய போதிலும், என்சிஇஆர்டி வெளியிட்ட விளக்கத்தில் உண்மையான வருத்தம் இல்லை என்றும், அவர்கள் அந்தத் தவறான தகவலை நியாயப்படுத்தவே முயற்சிப்பதாகவும் நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.
நீதித்துறை கண்ணியம்
நீதித்துறையின் கண்ணியம் மற்றும் மாணவர்களின் எதிர்காலம்
8 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் தங்கள் ஆரம்பக் கல்வி ஆண்டுகளில் இருக்கும்போது, நீதித்துறை குறித்து இத்தகைய ஒருதலைப்பட்சமான கருத்துகளைப் படிப்பது அவர்களுக்குத் தவறான புரிதலை ஏற்படுத்தும் என்று நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது. நீதித்துறையின் சுதந்திரம் மற்றும் தன்னாட்சியைப் பாதிக்கும் வகையில் இத்தகைய கருத்துகள் இருப்பது கண்டிக்கத்தக்கது என்றும், இது நீதித்துறையின் கௌரவத்தைக் குறைக்கும் முயற்சி என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர். ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் நீதித்துறை குறித்த எதிர்மறையான பிம்பத்தை இது உருவாக்கும் என்றும் எச்சரிக்கப்பட்டது.
உத்தரவு
புத்தகங்களை அகற்றவும் பறிமுதல் செய்யவும் உத்தரவு
உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி, "Exploring Society: India and Beyond" என்ற தலைப்பிலான அந்தப் புத்தகத்தின் டிஜிட்டல் பதிப்புகள் இணையதளங்களில் இருந்து நீக்கப்பட வேண்டும். மேலும், விற்பனைக்குச் சென்றுள்ள மற்றும் விநியோகிக்கப்பட்ட அனைத்துப் புத்தகங்களையும் என்சிஇஆர்டி இயக்குநர் மற்றும் மாநிலக் கல்வித் துறைச் செயலாளர்கள் இணைந்து பறிமுதல் செய்ய வேண்டும். அந்தப் புத்தகத்தைப் பயன்படுத்திப் பாடங்கள் நடத்தப்படக்கூடாது என்றும், இந்த உத்தரவை நிறைவேற்றியது குறித்த அறிக்கையை இரண்டு வாரங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அடுத்த கட்ட விசாரணை அடுத்த மாதம் நடைபெறவுள்ளது.