திடீரென முடங்கிய தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக இணையதளம்
தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் காலியாகவுள்ள 685 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று இன்று(ஆகஸ்ட்.,18)காலை தமிழக அரசு அறிவித்தது. அதன்படி இந்த பதிவுகள் இன்று மதியம் 1 மணிக்கு இணையத்தில் துவக்கப்பட்டு, வரும் செப்டம்பர் 18ம்தேதி மதியம் 1 மணிவரை விண்ணப்பங்கள் பெறப்படும் என்று கூறப்பட்டது. http://arasubus.tn.gov.in என்னும் இணையதளத்தில் பணிக்கான விண்ணப்பங்களை பதிவுச்செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் விண்ணப்ப பதிவுகள் துவங்கிய ஒருசில நிமிடத்திலேயே இந்த இணையதளம் முடங்கியது. இந்த இணையத்தளத்தில் ஒரேநேரத்தில் 60 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் விண்ணப்பிக்க முயற்சி செய்த காரணத்தினால்தான் இணையதளம் முடங்கியது என்று போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதனையடுத்து, இணையத்தளத்தினை சரிசெய்யும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.