Page Loader
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறக்கப்படுகிறது
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறக்கப்படுகிறது

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறக்கப்படுகிறது

எழுதியவர் Nivetha P
Aug 09, 2023
02:50 pm

செய்தி முன்னோட்டம்

கேரளா மாநிலம், பத்தனம் திட்டா மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டு ஆடி மாதத்திலும் நிறை புத்தரிசி என்னும் பூஜை மிக சிறப்பாக நடைபெறும். இந்த பூஜை நாட்டில் வறட்சி நீங்கி, வளம் செழிப்பதற்காக நடத்தப்படுவதாக நம்பப்படுகிறது. அதன்படி இந்தாண்டிற்கான புத்தரிசி பூஜை நாளை(ஆகஸ்ட்.,10) நடக்கவுள்ளது என்று செய்திகள் தெரிவிக்கிறது. இதனையொட்டி சபரிமலை ஐயப்பன் கோயில் இன்று(ஆகஸ்ட்.,9) மாலை 5 மணியளவில் திறக்கப்படவுள்ளது. அதனை தொடர்ந்து இந்த பூஜையினை நடத்த தேவையான பட்டு வஸ்திரம் சூட்டப்பட்ட 51 நெற்கதிர் கட்டுகள், அலங்கரிக்கப்பட்ட ஆபரணப்பெட்டி ஆகியன வாகனத்தில் ஏற்றி தேவசம்போர்டு அதிகாரிகள் மற்றும் பக்தர்கள் ஒன்றிணைந்து ஊர்வலமாக அச்சன் கோயிலில் இருந்து எடுத்துவரவுள்ளனர்.

பூஜை 

நாளை இரவு 10 மணிக்கு கோயில் நடை சாற்றப்படும் 

இவ்வாறு ஊர்வலமாக கொண்டுவரப்படும் நெற்கதிர்கள் இன்று மாலை 3 மணிக்கு பம்பை கணபதி கோயிலில் வைத்து பூஜை செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது. அதன் பின், விரதம் மேற்கொண்ட 51 பக்தர்கள் இந்த 51 நெற்கதிர்களை சுமந்துக்கொண்டு சன்னிதானம் வரை எடுத்துச்சென்று ஒப்படைப்பர். அதை அனைத்தையும் தேவசம்போர்டு அதிகாரிகள் பஞ்ச வாத்தியங்கள் முழங்குகையில் பெற்றுக்கொள்வர் என்று தெரிகிறது. நாளை காலை 5.45 மணிக்கு துவங்கும் இந்த புத்தரிசி பூஜை நிறைவடைந்த பின்னர், பக்தர்களுக்கு நெற்கதிர்கள் பிரசாதமாக வழங்கப்படும். இந்த பூஜை காரணமாக நாளை முழுவதும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இரவு 10 மணிக்கு கோயில் நடை சாற்றப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.