சாப்பாட்டு அரிசி விலை கிடுகிடு உயர்வு: பொன்னி, RNR கிலோவுக்கு ரூ.15 வரை திடீர் ஏற்றம்; காரணம் என்ன?
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக அரிசியின் சில்லறை விற்பனை விலை கிலோவுக்கு ₹5 முதல் ₹15 வரை அதிரடியாக உயர்ந்துள்ளது. 25 கிலோ கொண்ட அரிசி மூட்டைக்கு ₹150 முதல் ₹375 வரை விலை உயர்ந்துள்ளதால், நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். தமிழ்நாடு தனது அன்றாடச் சந்தை பயன்பாட்டிற்கான பொன்னி, பாபட்லா (BPT), RNR போன்ற மேல்தர நெல் ரகங்களுக்கு ஆந்திரா, தெலங்கானா மற்றும் கர்நாடக மாநிலங்களையே பெருமளவில் நம்பியுள்ளது. இம்மாநிலங்களில் வறட்சி, மழைப்பற்றாக்குறை மற்றும் துங்கபத்ரா அணை பராமரிப்பு பணிகளால் நெல் சாகுபடி பரப்பு வெகுவாகக் குறைந்துள்ளது. இதுவே அரிசி விலை உயர்விற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
மற்ற காரணிகள்
தமிழகத்தில் குறைவான சாகுபடி
மத்திய அரசு பாஸ்மதி அல்லாத அரிசி ஏற்றுமதிக்கு அனுமதி அளித்துள்ளதும், சந்தையில் விநியோக பற்றாக்குறையை உருவாக்கியுள்ளது.
தமிழ்நாட்டில் விளையும் பெரும்பாலான நெல் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தால் ரேஷன் விநியோகத்திற்காகக் கொள்முதல் செய்யப்படுகிறது.
மேலும், சன்ன ரக நெல் சாகுபடி தமிழகத்தில் குறைவாகவே மேற்கொள்ளப்படுகிறது.
ழக்கமாக நெல் விளையும் ஆரணி பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகளே, தற்போது ஸ்டாக் பற்றாக்குறை காரணமாக மொத்த விற்பனை சந்தைக்கு வந்து ரொக்க பணம் கொடுத்து அரிசியை கொள்முதல் செய்து வருகின்றனர்.
ஆவணி மாதத்தில் பொதுவாக அரிசி விலை சற்று உயர்வது வழக்கம் என்றாலும், குறுவை சாகுபடி பாதிப்பைக் சுட்டிக்காட்டி சந்தையில் செயற்கையான அரிசி பற்றாக்குறையை உருவாக்க சிலர் முயலக்கூடும் என அரிசி ஆலை உரிமையாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.