ஒடிசா மாநிலத்தின் சிவப்பு எறும்பு சட்னிக்கு புவிசார் குறியீடு
ஒடிசாவின் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் சிவப்பு எறும்புகளை வைத்து செய்யப்படும் சட்னிக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இந்த சட்னியை ஒடிசாவில் பொதுவாக 'காய் சட்னி' என்று அழைக்கிறார்கள். இந்த சட்னி அதன் மருத்துவ மற்றும் ஊட்டச்சத்து குணங்களுக்காக அப்பகுதியில் புகழ் பெற்றது. ஜனவரி 2, 2024 அன்று, இந்த தனித்துவமான சட்னிக்கு புவிசார் குறியீடு(ஜிஐ) வழங்கப்பட்டது. விஞ்ஞான ரீதியாக ஓகோபில்லா ஸ்மரக்டினா என்று அழைக்கப்படும் சிவப்பு நெசவாளர் எறும்புகள் ஒருவரை கடித்ததால் அவருக்கு மிகுந்த வலியை ஏற்படுத்துவதுடன், அவரின் தோல்களில் கொப்புளங்களையும் ஏற்படுத்தும். இந்த எறும்புகள் ஆசியாவின் இரண்டாவது பெரிய உயிர்க்கோளமாக கருதப்படும் சிமிலிபால் காடுகள் உட்பட மயூர்பஞ்ச் காடுகளில் காணப்படுகின்றன.