நாமக்கல் ராசிபுரத்தில் கருப்பனார் கோயில் திருவிழா
தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள நாமக்கல் ராசிபுரம் அருகேவுள்ள பட்டணம் பகுதியில் கருப்பனார் கோயில் உள்ளது. இந்த கோயில் சுமார் 200 ஆண்டுகள் பழமைவாய்ந்தது. இந்த பிரசித்தி பெற்ற கோயிலில் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை திருவிழா நடைபெறும். கொரோனா காலகட்டத்தில் இந்த சுழற்சி முறை விடுபட்ட நிலையில், தற்போது 4 ஆண்டுகளுக்கு பிறகு இந்த கோவில் திருவிழா மிக விமர்சையாக நடத்த திட்டமிடப்பட்டது. அதன்படி, ஏராளமான பக்தர்கள் சூழ இத்திருவிழா அரங்கேறியுள்ளது. இந்த கோயிலுக்கென தனி கட்டிடங்கள் ஏதுமில்லை. அதனால் பக்தர்கள் இங்குள்ள வேல்கம்புகள் மற்றும் மணிகளோடு தரைத்தளத்தில் அமைந்திருக்கும் பள்ளத்து கருப்பனாருக்கு திருவிழாவின் பொழுது மட்டும் தீபாராதனை காட்டுவர்.
திருவிழா நாட்களில் கிடா வெட்டி விருந்து
இந்த திருவிழாவிற்காக கோவை, சென்னை, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், ஈரோடு போன்ற பல மாவட்டங்களில் இருந்து ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு தங்கள் நேர்த்தி கடனை செலுத்தினர். அதன்படி பக்தர் ஒருவர் தனது வேண்டுதலுக்காக ஒரு டன் எடை மற்றும் 21 அடி உயரம் கொண்ட பிரம்மாண்ட 2 அரிவாள்களை செலுத்தினார். அதற்கு பூஜைகள் செய்யப்பட்ட பின்னர் அவை கிரேன் உதவியுடன் நடப்பட்டது. மேலும் இங்கு திருவிழா நாட்களில் மட்டுமே கிடா வெட்ட அனுமதி உண்டு. அதனை தவிர்த்து மற்ற நாட்களில் இங்கு கிடா வெட்ட கூடாது என்றும் கூறப்படுகிறது குறிப்பிடத்தக்கது.