
40 வயதிற்கு மேல் வாழ்வதே அரிது; மர்ம நோயால் பீடிக்கப்பட்ட பீகார் கிராமத்தின் பின்னணி
செய்தி முன்னோட்டம்
பீகார் மாநிலம் முங்கர் மாவட்டத்தில் உள்ள தூத் பானியா கிராமத்தில் வசிக்கும் பழங்குடி சமூகத்தை ஒரு மர்ம நோய் கடுமையாகப் பாதித்துள்ளது. இங்கு வசிப்பவர்கள் 40 வயதுக்கு மேல் வாழ்வது அரிதாக உள்ளது. சுமார் 250 பேர் வசிக்கும் இந்தக் கிராமத்தில், கடுமையான எலும்பு மற்றும் தசை வலி ஏற்பட்டு, படிப்படியாக பக்கவாதம் உண்டாகி, முன்கூட்டிய மரணம் ஏற்படுகிறது. 56 வயதான வினோத் பேஸ்ரா உட்படப் பலர் படுத்த படுக்கையாகி, மெதுவான மரணத்தை எதிர்நோக்கி உள்ளனர். கடந்த ஓராண்டில் மட்டும் 30 முதல் 55 வயதுக்குட்பட்ட நான்கு பேர் இந்த நோயால் இறந்துள்ளனர். கிராம மக்களில் 25% பேர் குச்சிகளின் உதவியுடன்தான் நடக்க வேண்டிய அவலநிலை உள்ளது.
மரணம்
மரணம் ஏற்படும் முறை
கால் வலி தொடங்கிப் பக்கவாதத்தில் முடிந்து, படுத்த படுக்கையாகி மரணிப்பதே இங்குள்ள சோகமான முறையாக உள்ளது. ஊடக அறிக்கையின் மூலம் இச்சிக்கல் அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது. சுகாதார அதிகாரி டாக்டர் சுபோத் குமார் கூறுகையில், முதற்கட்ட ஆய்வில், இது தாதுக்கள் மற்றும் வைட்டமின் குறைபாடுகள் மற்றும் அசுத்தமான நிலத்தடி நீர் ஆகியவற்றால் ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதையடுத்து, மாவட்ட நிர்வாகம் உடனடியாகப் பொது சுகாதாரப் பொறியியல் துறைக்கு (PHED) தண்ணீரைச் சோதிக்க உத்தரவிட்டது. மருத்துவக் குழுவினர் கிராமத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர். இந்தக் கோளாறு ஆஸ்டியோபோரோசிஸ் ஆக இருக்கலாம் என்று மருத்துவர்கள் சந்தேகிக்கின்றனர். உண்மையான காரணத்தைக் கண்டறிந்து சிகிச்சையளிக்க மருத்துவ முகாம் அமைக்கப்படும் என்றும் அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.