ஒடிசா ரயில் விபத்தில் பலியானவர்களுக்கு காஞ்சி கோவிலில் மோட்ச தீபம்
ஒடிசாவின் பாலசோர் பகுதியில் கோரமண்டல் ரயில் சரக்கு ரயிலின் மீது மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 288 பேர் உயிரிழந்தனர். 900க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். மேலும், அதை தவிர 200 பேர் சிறு சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். இந்த ரயில் விபத்து, நாடு முழுவதும் மிக பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இந்த கொடூர சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், மக்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
விரைவில் குணமடைய சிறப்பு வழிபாடு
இந்நிலையில், உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தி அடைய தமிழகத்தின் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் மோட்ச தீபம் ஏற்றப்பட்டது. மேலும், விபத்தில் சிக்கி காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய சிறப்பு வழிபாடுகளும் பிராத்தனைகளும் நடைபெற்றன. சங்கராச்சாரியார் ஜெகத்குரு விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வேண்டுகோளின் படி இந்த சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. இதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு பாதிக்கப்பட்ட பயணிகள் சீக்கிரம் குணமடைய பிராத்தனை செய்தனர். இதைத்தவிர உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கும்பகோணம் எம்.எல்.ஏ. அலுவலகத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கும்பகோணம் எம்.எல்.ஏ. அன்பழகன் உட்பட பலரும் கலந்துகொண்டு உயிரிழந்தவர்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.