திருமணம் செய்வதாகக் கூறி மோசடி! முகமது ஷமியின் தம்பி கைஃப் மீது பாய்ந்தது எஃப்ஐஆர்
செய்தி முன்னோட்டம்
இந்தியக் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியின் சகோதரரும் பெங்கால் ரஞ்சி அணி வீரருமான முகமது கைஃப் மீது லக்னோவைச் சேர்ந்த பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை புகார் அளித்துள்ளார். திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்துத் தன்னுடன் தொடர்ச்சியாக பாலியல் உறவில் ஈடுபட்டுப் பின்னர் ஏமாற்றிவிட்டதாக அப்பெண் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக லக்னோவின் ஆசியானா, விபூதிகண்ட் காவல் நிலையங்கள் மற்றும் டிசிபி (கிழக்கு) அலுவலகத்தில் எஃப்ஐஆர் பதிவு செய்யக் கோரி அவர் மனு அளித்துள்ளார்.
இன்ஸ்டாகிராம்
இன்ஸ்டாகிராம் அறிமுகமும் வேலை ராஜினாமாவும்
டெல்லியில் ஏர்லைன்ஸ் பணிப்பெண்ணாக வேலை பார்த்து வந்த அப்பெண்ணிற்கு 2020 ஆம் ஆண்டு இன்ஸ்டாகிராம் மூலம் முகமது கைஃப் அறிமுகமாகியுள்ளார்.
தான் ஏற்கனவே விவாகரத்தானவர் என்றும் ஒரு மகன் இருப்பதாகவும் கூறியபோதும், அதைப் பற்றி கவலையில்லை எனக் கூறி கைஃப் பழகத் தொடங்கியுள்ளார்.
நிச்சயம் திருமணம் செய்து கொள்வதாக கைஃப் உறுதியளித்ததைத் தொடர்ந்தே, தான் பார்த்து வந்த வேலையையும் ராஜினாமா செய்ததாக அப்பெண் தெரிவித்துள்ளார்.
பாலியல் அத்துமீறல்
பல்வேறு நகரங்களில் பாலியல் அத்துமீறல் குற்றச்சாட்டு
திருமணம் குறித்துப் பேசும் போதெல்லாம் கைஃப் தான் இருக்கும் நகரங்களுக்குத் தன்னை வரவழைத்துப் பாலியல் உறவில் ஈடுபட்டதாக அப்பெண் குற்றம் சாட்டியுள்ளார்.
லக்னோ, டெல்லி மற்றும் கொல்கத்தா ஆகிய நகரங்களில் உள்ள விடுதிகளில் இந்தச் சம்பவங்கள் நடந்துள்ளன.
ஐபிஎல் ஏலத்திற்குப் பிறகு திருமணம் செய்து கொள்வதாகக் கைஃப் வாக்குறுதி அளித்ததாகவும், ஆனால் பின்னர் திருமணப் பேச்சை தவிர்த்து ஏமாற்றத் தொடங்கியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நீதி கோரி மனு
நீதி கேட்டு லக்னோ காவல் நிலையத்தில் மனு
கடந்த 2024 அக்டோபர் மாதம் பெங்கால் ரஞ்சி அணி லக்னோ வந்திருந்தபோது, கோமதி நகரில் உள்ள ஹோட்டலுக்கு வரவழைத்து தன்னுடன் தங்கியதாக அப்பெண் கூறியுள்ளார்.
"கைஃப் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி எனது குரலை நசுக்க முடியாது. எனக்கு நீதி கிடைக்க வேண்டும்" எனக் கூறியுள்ள அப்பெண், லக்னோ காவல் அதிகாரிகளிடம் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளார்.
இக்குற்றச்சாட்டுகள் குறித்து முகமது கைஃப் தரப்பில் இதுவரை அதிகாரப்பூர்வ விளக்கம் எதுவும் வரவில்லை.