தீவிரவாதியின் கன்னத்தில் பளார் என அறைவிட்ட 'மாவீரன்'; வைரலாகும் வீடியோ
மகாராஷ்டிரா மாநிலம், துஹ்லி மாவட்டத்தில் அமைந்துள்ள சுவாமிநாராயண் கோவிலில், நேற்று (ஆகஸ்ட் 9) பொதுமக்கள் வழக்கம் போல சாமி தரிசனம் செய்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென முகமூடி அணிந்து, துப்பாக்கி ஏந்திய மர்ம மனிதர்கள் இருவர் நுழைந்தனர். அங்கிருந்த ஒருவரை பிணைக்கைதியாக பிடித்து மண்டியிட செய்தனர். அதை கண்டு அங்கிருந்த மக்கள் கூச்சலிடபடி பயந்து ஓடினர். பரபரப்பாக காணப்பட்ட அந்த சூழலில், திடீரென ஒரு நபர், தைரியமாக 'தீவிரவாதி'யை நெருங்கி, கன்னத்தில் 'பளார்' என ஒரு அறை விட்டார். உடனடியாக அங்கே விரைந்த போலீசார், 'தீவிரவாதி'யை விட்டுவிட்டு, அறைவிட்டவரை சமாதானம் செய்தனர்.
போலி 'போலீஸ்' தீவிரவாதி
அதன் பின்னரே, முகமூடி அணிந்து துப்பாக்கியுடன் பயங்கரவாதி போல் இருந்ததும், பிணை கைதியாக இருந்தவரும் போலீசார்களே என தெரியவந்தது. அரங்கேற்றப்பட்ட இந்த சம்பவம், பயங்கரவாத தடுப்பு தொடர்பான 'போலீஸ் பயிற்சி (Police Drill)' என்பதும் தெரியவந்தது. பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைக்கான பயிற்சிக்காக போலீசார் துப்பாக்கியுடன் பயங்கரவாதி போல் மாறுவேடத்தில் மதவழிபாட்டுத்தலத்திற்குள் நுழைந்தனர் என அங்கே கூடியிருந்தவர்களிடம் பின்னர் தெரிவிக்கப்பட்டது. எனினும், இந்த சம்பவத்தில் தைரியமாக, 'தீவிரவாதி'யை கையாண்டவர், உண்மையில் கோவிலுக்கு வந்த பக்தர் என்பதும், அவர் பெயர் பிரஷாந்த் குல்கர்னி (வயது 35) என்பது தெரியவந்துள்ளது. அவருடைய பிள்ளைகள், தீவிரவாதியை பார்த்து பயந்ததை கண்டு, குல்கர்னி வெகுண்டெழுந்து, அறை விட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.