நாடாளுமன்ற நிகழ்வுகளை ஒளிபரப்பும் சான்சத் தொலைக்காட்சி பற்றி ஒரு பார்வை
18வது மக்களவையின் முதல் அமர்வு இன்று தொடங்கியது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை பிரதிநிதிகள் அனைவரும் தற்காலிக சபாநாயகரால் இன்று பதவி பிரமாணம் செய்து வைக்கப்பட்டனர். இந்த தருணத்தில், நமது இந்தியா மக்களவை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை பற்றியும், அவையின் சுவாரசிய நிகழ்வுகளை தினந்தோறும் பட்டியலிடவுள்ளோம். அந்த வகையில் இன்று ஒரு தகவலாக சன்ஸாத் தொலைக்காட்சி என்றால் என்ன? அதன் செயல்பாடு என்னவென்பதையும் அறிந்து கொள்ளுங்கள்.
மத்திய அரசின் தொலைக்காட்சி ஊடகம் சன்சாத்
சன்சாத் தொலைக்காட்சி (Sansad TV) என்பது இந்திய அரசாங்கத்தின் தொலைக்காட்சி ஊடகம் ஆகும், இது இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் நிகழ்ச்சிகளையும் மற்ற பொது விவகார நிகழ்ச்சிகளையும் ஒளிபரப்புகிறது. அதற்கு முன்னர் வரையில், லோக்சபா டிவி மற்றும் ராஜ்ய சபா டிவி என இரண்டு தனித்தனி தொலைக்காட்சி சேனல்கள் செயல்பட்டு வந்த நிலையில், அவ்விரண்டையும் ஒருங்கிணைத்து 2021ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் சன்சாத் தொலைக்காட்சி உருவாக்கப்பட்டது. இருப்பினும் ஒவ்வொரு அவை நடவடிக்கைகளும் தனித்தனி செயற்கைக்கோள் அலைவரிசைகளில் ஒளிபரப்பப்படுகின்றன.
இரு மொழிகளில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள்
அவை நிகழ்வுகளை நேரலையில் இரு மொழிகளில் ஒளிபரப்புகிறது சன்சாத் - ஆங்கிலம் மற்றும் ஹிந்தி. இன்றைய நாடாளுமன்ற கூட்டத்தில் பிரதமர் மோடி உட்பட நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவியேற்றத்தை சான்சாத் டிவியின் யூட்யூப் சேனலில் பார்க்கலாம். இந்த டிவி சேனலில் பிபேக் டெப்ராய், கரண் சிங், அமிதாப் காந்த், ஷஷி தரூர், விகாஸ் ஸ்வரூப், பிரியங்கா சதுர்வேதி மற்றும் சஞ்சீவ் சன்யால் போன்ற பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிபுணர்களை விருந்தினர்களாக கொண்டு பல்வேறு கலந்துரையாடல் நிகழ்ச்சிகளும் நடைபெறும். அதுமட்டுமின்றி இந்திரா காந்தி தேசிய கலை மையமும் (IGNCA) மற்றும் சன்சாத் தொலைக்காட்சியும் இணைந்து இந்திய கலை மற்றும் கலாச்சாரத்தை மக்களுக்கு எடுத்துக்காட்டும் ஒரு முயற்சியாக, IGNCA தயாரித்த நிகழ்ச்சிகள் சன்சாத் டிவியில் ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளன.