ஈரானியத் தலைவர் காமேனி கொலை: லக்னோ, ஐதராபாத் மற்றும் ஸ்ரீநகரில் ஷியா முஸ்லிம்கள் தீவிர போராட்டம்
செய்தி முன்னோட்டம்
ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதலில் கொல்லப்பட்ட செய்தி வெளியானதைத் தொடர்ந்து, இந்தியாவின் பல நகரங்களில் ஷியா முஸ்லிம்கள் வீதிகளில் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். லக்னோ, ஐதராபாத், ஸ்ரீநகர் மற்றும் போபால் போன்ற பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு தங்களது கண்டனத்தையும் ஆழ்ந்த இரங்கலையும் பதிவு செய்தனர். காமேனியுடன் அவரது குடும்ப உறுப்பினர்களும் கொல்லப்பட்டதால், இந்தத் தாக்குதல் உலகளாவிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
பதற்றம்
ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளில் பதற்றம்
காஷ்மீர் பள்ளத்தாக்கில் ஸ்ரீநகரின் லால் சௌக் பகுதியில் போராட்டக்காரர்கள் கருப்பு மற்றும் சிவப்பு நிறக் கொடிகளுடன் திரண்டனர். காமேனியின் உருவப்படங்களை ஏந்தியபடி போராட்டக்காரர்கள் முழக்கங்களை எழுப்பினர். அசம்பாவிதங்களைத் தவிர்க்க லால் சௌக் பகுதி சீல் வைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அமைதி காக்குமாறு முதலமைச்சர் உமர் அப்துல்லா வேண்டுகோள் விடுத்துள்ளார். லே மற்றும் கார்கில் பகுதிகளில் 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. கார்கில் ஜாமியா மசூதியில் அடுத்த 40 நாட்களுக்குத் தொடர் இரங்கல் கூட்டங்கள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேசம்
உத்தரபிரதேசத்தில் கருப்புக் கொடி போராட்டம்
லக்னோவின் பழைய நகரப் பகுதிகளான ரூமி கேட், பரா இமாம்பாரா மற்றும் சோட்டா இமாம்பாரா மசூதிகள் அருகே நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டனர். ஷியா மதகுரு மௌலானா கல்ப் ஜவ்வாத், மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்க அழைப்பு விடுத்துள்ளார். வீடுகளின் மேல் கருப்புக் கொடிகளை ஏற்றியும், கடைகளை அடைத்தும் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்யுமாறு அவர் கேட்டுக்கொண்டார். அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் ஜான்பூர், முசாபர்நகர் பகுதி மக்களும் இந்தத் தாக்குதலைக் கண்டித்துப் பேரணிகளை நடத்தினர்.
மத்தியப் பிரதேசம்
தெலுங்கானா மற்றும் மத்தியப் பிரதேசம்
ஐதராபாத்தின் புராண ஹவேலி பகுதியில் தன்சீம்-இ-ஜாஃபரி என்ற அமைப்பு சார்பில் பிரம்மாண்ட பேரணி நடத்தப்பட்டது. இதில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்படப் பலரும் கருப்பு உடை அணிந்து பங்கேற்றனர். இதேபோல், மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள ஜாமியா மசூதியில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில், இஸ்லாமிய மார்க்கத்திற்கு காமேனி ஆற்றிய பங்களிப்புகள் நினைவு கூரப்பட்டன.
கர்நாடகா
கர்நாடகாவின் உருக்கமான அஞ்சலி
கர்நாடகாவின் அலிபுரா கிராமத்தில் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் நிகழ்ந்துள்ளது. 1986 ஆம் ஆண்டு காமேனி இந்தக் கிராமத்திற்கு வருகை தந்திருந்ததால், அவருடன் தனிப்பட்ட பிணைப்பு கொண்ட அந்த ஊர் மக்கள், தானாக முன்வந்து கடைகளை அடைத்து மூன்று நாட்கள் துக்கம் அனுசரிப்பதாக அறிவித்துள்ளனர். அங்குள்ள அனைத்துப் பொது நிகழ்ச்சிகளும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்தத் தொடர் போராட்டங்கள் இந்தியாவில் சட்டம் ஒழுங்கு சவால்களை ஏற்படுத்தியுள்ளது.