LOADING...
TVK Stampede கரூர் துயர சம்பவத்தில் பலி எண்ணிக்கை 41 ஆக உயர்வு
கரூர் துயர சம்பவத்தில் பலி எண்ணிக்கை 41 ஆக உயர்வு

TVK Stampede கரூர் துயர சம்பவத்தில் பலி எண்ணிக்கை 41 ஆக உயர்வு

எழுதியவர் Venkatalakshmi V
Sep 29, 2025
09:22 am

செய்தி முன்னோட்டம்

கடந்த சனிக்கிழமை கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் நடத்திய பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல், மரண மொத்த எண்ணிக்கையை 41 ஆக உயர்த்தியுள்ளது. இந்த நிகழ்வில் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஆரம்பத்தில் 39 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. பின்னர் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் இருந்த இருவர் உயிரிழந்ததை தொடர்ந்து, பலி எண்ணிக்கை 41-ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களில் 13 ஆண்கள், 18 பெண்கள் மற்றும் 9 குழந்தைகள் அடங்குவர். இந்தியாவில் இதுவரை நடந்த பெரிய கூட்ட நெரிசல் சம்பவங்களில் இதுவும் ஒன்றாகக் கருதப்படுகிறது. தற்போது, கரூர் அரசு மருத்துவமனையில் 11 பேர் ICU-ல் சிகிச்சை பெற்று வருகின்றனர், மேலும் 90க்கும் மேற்பட்டோர் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.

வழக்கு

CBI விசாரணை கோரி நீதிமன்றத்தை நாடியுள்ள TVK

இந்த கோர சம்பவத்தில் சுயாதீன விசாரணை கோரி தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டப்பிரிவு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை நீதிபதி எம். தண்டபாணி முன், எஸ். அறிவழகன் தலைமையிலான வழக்கறிஞர்கள், இந்த வழக்கை சிபிஐ அல்லது சிறப்பு புலனாய்வு குழுவிடம் சுயாதீன விசாரணைக்காக பரிந்துரைக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இந்த வழக்கு திங்கள்கிழமை பிற்பகல் 2.15 மணிக்கு விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த சம்பவத்திற்குப் பின்னால் சதி இருப்பதாகக் கூறி, அந்தக் கட்சி தேசிய மனித உரிமைகள் ஆணையத்திலும் புகார் அளித்துள்ளது. அதே வேளையில், பாதுகாப்பு நெறிமுறைகள் உறுதி செய்யப்படும் வரை விஜய் மற்றும் TVK-வின் எந்தவொரு பேரணிக்கும் காவல்துறை அனுமதி வழங்குவதை தடுக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகினார்.