எல்லாவற்றையும் விட மனிதநேயமே முக்கியம்! ஈரான் போர்க்கப்பலுக்கு கொச்சியில் அனுமதி கொடுத்ததன் காரணம் இதுதான்
செய்தி முன்னோட்டம்
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ஈரானிய கடற்படைக் கப்பலான ஐஆர்ஐஎஸ் லாவன் கொச்சி துறைமுகத்தில் அடைக்கலம் புக இந்தியா அனுமதி அளித்தது. இது குறித்து ராய்சினா டயலாக் நிகழ்வில் பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், புவிசார் அரசியல் காரணங்களை விட மனிதநேய அடிப்படையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிவித்தார். கூடுதல் விவரங்கள் இங்கே:-
இளம் வீரர்கள்
தொழில்நுட்பக் கோளாறும் இளம் வீரர்களும்
பிப்ரவரி மத்தியில் இந்தியாவில் நடைபெற்ற சர்வதேச கடற்படை அணிவகுப்பில் பங்கேற்க வந்த இந்தக் கப்பலில் 183 ஊழியர்கள் இருந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் இளம் கடற்படை மாணவர்கள் ஆவர். போர் பதற்றம் உச்சமடைந்த வேளையில், கப்பலில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் இந்தியாவிடம் ஈரான் உதவி கோரியது. மார்ச் 1 அன்று இந்தியா அனுமதி அளித்ததைத் தொடர்ந்து, மார்ச் 4 இல் கப்பல் கொச்சி வந்தடைந்தது.
மூழ்கடிப்பு
ஐஆர்ஐஎஸ் தேனா கப்பல் மூழ்கடிப்பு
இதேவேளையில், இலங்கைப் பகுதியில் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலால் ஈரானின் மற்றொரு கப்பலான ஐஆர்ஐஎஸ் தேனா மார்ச் 4 அன்று மூழ்கடிக்கப்பட்டது துரதிர்ஷ்டவசமானது என்று ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ளார். இதில் 80 க்கும் மேற்பட்ட ஈரானிய வீரர்கள் உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்தின் போது இந்தியா அமைதி காத்ததாக எதிர்க்கட்சிகள் விமர்சித்த நிலையில், இந்தியக் கடற்படை மீட்புப் பணிகளுக்காக ஐஎன்எஸ் தரங்கிணி மற்றும் ஐஎன்எஸ் இக்ஷாக் ஆகியவற்றை அனுப்பியிருந்ததையும் சுட்டிக்காட்டினார்.
நடுநிலை
இந்தியாவின் நடுநிலைப்பாடு
மத்திய கிழக்கு போரில் இந்தியா எந்தப் பக்கமும் சாராமல், இருதரப்பும் அமைதி காக்க வேண்டும் என்றே வலியுறுத்தி வருகிறது. ஈரானிய ஆன்மீகத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மறைவிற்கு இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி நேரில் சென்று இரங்கல் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. இந்தியப் பெருங்கடல் பகுதியில் உள்ள புவிசார் அரசியல் யதார்த்தங்களைப் புரிந்துகொண்டு இந்தியா செயல்படுவதாக கூறப்படுகிறது.