இஸ்ரேல்-ஹமாஸ் போர்: பாலஸ்தீன மக்களுக்கு நிவாரண பொருட்களை அனுப்பியது இந்தியா
இஸ்ரேல்-ஹமாஸ் போர் தொடங்கி இரண்டு வாரங்களுக்கும் மேல் ஆகும் நிலையில், காசா பகுதியில் வாழும் மக்களுக்கு உயிர்காக்கும் மருந்துகள், தூங்கும் பைகள் போன்ற நிவாரண பொருட்களை இந்தியா அனுப்பியுள்ளது. நேற்று திறக்கப்பட்ட எகிப்தின் ரஃபா எல்லையை கடந்து இந்த நிவாரண பொருட்கள் காசா மக்களை சென்றடையும். இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டிருக்கும் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, "அத்தியாவசிய உயிர்காக்கும் மருந்துகள், அறுவை சிகிச்சைப் பொருட்கள், கூடாரங்கள், தூங்கும் பைகள், தார்ப்பாய்கள், சானிட்டரி பொருட்கள் மற்றும் தண்ணீர் சுத்திகரிப்பு மாத்திரைகள்" போன்ற நிவாரண பொருட்கள் பாலஸ்தீன மக்களுக்காக அனுப்பப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். கிட்டத்தட்ட 6.5 டன் மருத்துவ பொருட்கள் மற்றும் 32 டன் பேரிடர் நிவாரணப் பொருட்களை இந்தியா தற்போது அனுப்பியுள்ளது.
எகிப்துக்கு புறப்பட்டது இந்திய விமானப்படையின் விமானம்
இவற்றை ஏற்றி செல்லும் இந்திய விமானப்படையின் IAF C-17 விமானம் எகிப்தில் உள்ள எல்-அரிஷ் விமான நிலையத்திற்கு இந்த பொருட்களை கொண்டு செல்லும். அங்கிருந்து தரைவழி போக்குவரத்து மூலம், எகிப்தின் ரஃபா எல்லையை கடந்து இவை பெரும்பாலான பாலஸ்தீன மக்கள் வாழும் காசா பகுதியை சென்றடையும். கடந்த அக்டோபர் 7ஆம் தேதி பாலஸ்தீன ஆயுத குழுவான ஹமாஸ், இஸ்ரேல் மீது திடீர் ஏவுகணை தாக்குதல் நடத்தியதை அடுத்து இஸ்ரேல்-ஹமாஸ் போர் வெடித்தது. அதன் பிறகு, தொடர்ந்து 2 வாரங்களாக பாலஸ்தீன மக்கள் வாழும் பகுதியை இஸ்ரேல் தாக்கி வருகிறது. இதனால் இதுவரை 4,300 பாலஸ்தீனியர்களும் 1,400 இஸ்ரேலியர்களும் உயிரிழந்துள்ளனர்.