கொச்சியில் தஞ்சம் புகுந்த மற்றொரு ஈரான் போர்க்கப்பல்; 183 வீரர்களுக்கு இந்தியா புகலிடம்
செய்தி முன்னோட்டம்
இலங்கை அருகே ஈரானின் ஐஆர்ஐஎஸ் டெனா போர்க்கப்பல் அமெரிக்காவால் மூழ்கடிக்கப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பே, ஈரானின் மற்றொரு போர்க்கப்பலான ஐஆர்ஐஎஸ் லவன் கொச்சி துறைமுகத்தில் தஞ்சம் புகுந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்தத் கப்பல் மார்ச் 4 ஆம் தேதி கொச்சியில் நங்கூரமிடப்பட்டது. கூடுதல் விவரங்கள் இங்கே:-
அனுமதி
மனிதாபிமான அடிப்படையில் அனுமதி
ஈரான் தரப்பிலிருந்து பிப்ரவரி 28 ஆம் தேதியே இதற்கான கோரிக்கை விடுக்கப்பட்டது. மார்ச் 1 ஆம் தேதி இந்திய அரசு இதற்கான ஒப்புதலை வழங்கியது. விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற மிலன் 2026 மற்றும் சர்வதேச கடற்படை அணிவகுப்பில் பங்கேற்றுவிட்டுத் திரும்பும் வழியில் இந்தக் கப்பலில் கோளாறு ஏற்பட்டது. கப்பலில் இருந்த 183 வீரர்களும் தற்போது கொச்சியில் உள்ள இந்திய கடற்படைக்குச் சொந்தமான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
மூழ்கடிப்பு
ஐஆர்ஐஎஸ் டெனா கப்பல் மூழ்கடிப்பு
ஐரிஸ் லவன் கொச்சியில் தஞ்சம் புகுந்த அதே மார்ச் 4 ஆம் தேதியன்றுதான், இலங்கையின் காலி கடற்கரையிலிருந்து 40 கடல் மைல் தொலைவில் ஐஆர்ஐஎஸ் டெனா கப்பலை அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் ஏவுகணை மூலம் தாக்கி மூழ்கடித்தது. இந்தத் தாக்குதலில் 87 ஈரான் வீரர்கள் உயிரிழந்தனர்; 32 பேரை இலங்கை கடற்படை மீட்டது. இந்தச் சம்பவத்தை அடுத்து, இந்திய கடற்படை உடனடியாக ஐஎன்எஸ் தரங்கிணி மற்றும் ஐஎன்எஸ் இக்ஷக் ஆகிய கப்பல்களை மீட்புப் பணிக்காக அனுப்பியது.
பதற்றம்
பிராந்தியப் பதற்றம்
மத்திய கிழக்கு நாடுகளில் போர் தீவிரமடைந்துள்ள சூழலில், ஈரானின் உச்ச தலைவர் கொல்லப்பட்டதற்குப் பழிவாங்க ஈரான் உறுதிபூண்டுள்ளது. இத்தகைய இக்கட்டான நிலையில், ஈரான் கப்பலுக்கு இந்தியா புகலிடம் அளித்திருப்பது சர்வதேச அளவில் கவனத்தைப் பெற்றுள்ளது. இதேபோல், ஈரானின் மற்றொரு கப்பலான ஐஆர்ஐஎஸ் புஷெர் தற்போது இலங்கையின் திருகோணமலை துறைமுகத்தில் தஞ்சம் புகுந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.