Loading...
பீரங்கிகளை நொடியில் அழிக்கும் அமெரிக்க சக்தி! ஜேவ்லின் ஏவுகணைகளை வாங்க இந்தியா திட்டம்; அமெரிக்க தூதர் தகவல்
அமெரிக்காவிடமிருந்து ஜேவ்லின் ஏவுகணைகளை வாங்க இந்தியா திட்டம்

பீரங்கிகளை நொடியில் அழிக்கும் அமெரிக்க சக்தி! ஜேவ்லின் ஏவுகணைகளை வாங்க இந்தியா திட்டம்; அமெரிக்க தூதர் தகவல்

எழுதியவர் Sekar Chinnappan
Aug 28, 2026
04:15 pm

செய்தி முன்னோட்டம்

அமெரிக்க தயாரிப்பான, தோளில் வைத்து இயக்கும் அதிநவீன ஜேவ்லின் பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை தொகுதியை வாங்க இந்தியா திட்டமிட்டுள்ளதாக இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் செர்ஜியோ கோர் தெரிவித்துள்ளார். இது இரு நாடுகளிடையேயான பாதுகாப்பு உறவை மேலும் வலுப்படுத்துவதுடன், எதிர்காலத்தில் இந்த ஏவுகணைகளை இந்தியாவிலேயே இணைந்து தயாரிப்பதற்கான வாய்ப்புகளையும் திறந்துவிடும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். வெளிநாட்டு ராணுவ விற்பனை வழியே இக்கொள்முதல் நடைபெறவுள்ளது.

சிறப்பம்சம்

என்ன சிறப்பம்சம் கொண்டது இந்த ஜேவ்லின் ஏவுகணை?

ரெய்தியான் மற்றும் லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனங்களால் தயாரிக்கப்படும் ஜேவ்லின், மனிதர்களால் எளிதில் எடுத்து செல்லக்கூடிய ஃபயர் அண்ட் ஃபர்கெட் (Fire-and-Forget) ரக ஏவுகணையாகும்.

அதாவது, ஏவப்பட்ட பிறகு இலக்கைத் தொடர்ந்து வழிகாட்ட வேண்டிய அவசியமில்லை.

அகச்சிவப்பு தொழில்நுட்பம் மூலம் இலக்கின் வெப்பத்தைக் கண்டறிந்து தாக்கும் திறன் கொண்டது.

மேலும், 150 மீட்டர் உயரத்திற்குப் பறந்து சென்று, போர் பீரங்கிகளின் பலவீனமான மேல் பகுதியை செங்குத்தாகத் தாக்கி அழிக்கும் தனித்துவமான அம்சம் கொண்டது.

சாதகம்

போர் பீரங்கிகளை நொடியில் அழிக்கும் பொருளாதார சாதகம்

சுமார் 4 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஒரு நவீனப் போர் பீரங்கியை, வெறும் 1,78,000 டாலர் மதிப்பிலான ஜேவ்லின் ஏவுகணையைக் கொண்டு 15 வினாடிகளுக்குள் சுட்டு வீழ்த்த முடியும்.

ராணுவ வீரர் ஒருவர் தனது தோளில் வைத்து இயக்கும் இந்த ஏவுகணை தொகுதி, இலக்கின் மதிப்போடு ஒப்பிடும்போது மிகவும் குறைந்த செலவிலேயே எதிரிகளின் பலமான கவச வாகனங்களை அழிக்கும் ஆற்றல் வாய்ந்தது.

இதனாலேயே 21 ஆம் நூற்றாண்டின் காலாட்படைப் போர்களில் இது மிகவும் விரும்பப்படும் ஆயுதமாக உருவெடுத்துள்ளது.

ADVERTISEMENT

அவசியம்

இந்திய ராணுவத்திற்கு இது ஏன் மிகவும் அவசியம்?

கடந்த ஆண்டு நடைபெற்ற ஆபரேஷன் சிந்தூர் மோதலுக்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் கவச எதிர்ப்புப் படையைப் பலப்படுத்த வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.

தற்போது பயன்பாட்டில் உள்ள பழைய பிரெஞ்சு தயாரிப்பான மிலன்-2டி மற்றும் சோவியத் காலத்து கொன்குர்ஸ்-எம் அமைப்புகளுக்குப் மாற்றாக இந்த 3 ஆம் தலைமுறை ஜேவ்லின் ஏவுகணைகள் அமையும்.

இதன் மேம்படுத்தப்பட்ட FGM-148F மாடல் 4,750 மீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கும் திறன் கொண்டதால் இந்திய எல்லைப் பாதுகாப்பு மேலும் பலமடையும்.

ADVERTISEMENT