Loading...
சர்வதேச விமான பயணிகளுக்கு செப்டம்பர் 1 முதல் போர்டிங் பாஸ் சீல் இல்லை: மத்திய அரசு
சர்வதேச விமான பயணிகளுக்கு செப்டம்பர் 1 முதல் போர்டிங் பாஸ் சீல் இல்லை

சர்வதேச விமான பயணிகளுக்கு செப்டம்பர் 1 முதல் போர்டிங் பாஸ் சீல் இல்லை: மத்திய அரசு

எழுதியவர் Sekar Chinnappan
Aug 22, 2026
07:52 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவில் உள்ள பன்னாட்டு விமான நிலையங்களில் இருந்து வெளிநாடுகளுக்கு பயணம் செய்யும் விமான பயணிகளுக்கு குடிவரவுத் துறை சார்பில் போர்டிங் பாஸில் முத்திரை குத்தும் நடைமுறை வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் முற்றிலுமாக ரத்து செய்யப்படவுள்ளது. இதன் மூலம் சர்வதேச பயணிகள் இனி காகித வடிவிலான போர்டிங் பாஸ்களைக் கையில் எடுத்துச் செல்ல வேண்டிய அவசியமில்லை என்றும், அதற்குப் பதிலாகத் தங்களின் ஸ்மார்ட்போன்களில் உள்ள இ-போர்டிங் பாஸ்களை காண்பித்து சோதனை முகப்புகளைக் கடந்து செல்லலாம் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

காரணம்

போர்டிங் பாஸ் முத்திரையை ரத்து செய்யக் காரணம் என்ன?

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் குடிவரவுப் பணியகம், விமான நிலைய அதிகாரிகளுக்கு இது தொடர்பான அதிகாரப்பூர்வ சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது.

போர்டிங் பாஸ்களில் கையால் முத்திரை குத்துவதால் பயணிகளுக்குத் தேவையற்ற நேர விரயமும் அசௌகரியங்களும் ஏற்படுவதாகப் புகார்கள் வந்தன.

மேலும், தவறாக அல்லது அரைகுறையாக முத்திரை குத்தப்படுவதால் போர்டிங் பாஸ்களை டிஜிட்டல் முறையில் சரிபார்ப்பதில் பல்வேறு தவறுகள் மற்றும் சிக்கல்கள் ஏற்படுவதைக் கண்டறிந்த பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அனுமதி

காகித போர்டிங் பாஸ்கள் ஏற்றுக்கொள்ளப்படுமா?

செப்டம்பர் 1 முதல் டிஜிட்டல் இ-போர்டிங் பாஸ்கள் முதன்மையாகப் பயன்படுத்தப்பட்ட போதிலும், காகித வடிவிலான போர்டிங் பாஸ்களைக் கொண்டு வரும் பயணிகளுக்கும் அனுமதி அளிக்கப்படும்.

ஆனால் அவர்களின் போர்டிங் பாஸ்களில் இனி எக்காரணம் கொண்டும் குடிவரவுத் துறை அதிகாரிகளால் முத்திரை குத்தப்பட மாட்டாது.

மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை ஏற்கனவே சில ஆண்டுகளுக்கு முன்பே உள்நாட்டு மற்றும் சர்வதேச பயணிகளின் போர்டிங் பாஸ்களில் முத்திரை குத்தும் முறையைக் கைவிட்டுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

இந்திய பாஸ்போர்ட்

இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு அடுத்தகட்ட திட்டம்

தொடர்ச்சியாக பயண நடைமுறைகளை எளிதாக்கும் நோக்கில், இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு பாஸ்போர்ட்டில் என்ட்ரி மற்றும் எக்சிட் முத்திரையிடும் முறையையும் முற்றிலுமாக ரத்து செய்ய குடிவரவுப் பணியகம் திட்டமிட்டுள்ளது.

இதற்கான முதற்கட்ட சோதனை முயற்சிகள் தற்போது குறிப்பிட்ட சில விமான நிலையங்களில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்த சோதனை வெற்றி பெற்ற பிறகு, இந்தியா முழுவதும் உள்ள அனைத்துப் பன்னாட்டு விமான நிலையங்களிலும் பாஸ்போர்ட் முத்திரையிடும் முறையும் விரைவில் ரத்து செய்யப்படும்.

ADVERTISEMENT