டிரைவர் தூங்குவதற்கு முன்பே கண்டுபிடிக்கும் ஸ்மார்ட் சீட்! ஐஐடி மெட்ராஸின் அசத்தல் இன்டெலிசீட் தொழில்நுட்பம்
செய்தி முன்னோட்டம்
இந்தியாவின் நெடுஞ்சாலைகளில் நிகழும் பெரும்பாலான வாகன விபத்துகளுக்கு ஓட்டுநர்களின் தூக்கமின்மை மற்றும் உடல் சோர்வே முக்கியக் காரணமாக அமைகிறது. இந்த ஆபத்தான பிரச்சினையைத் தடுப்பதற்காக, சென்னை ஐஐடியின் பயோ-இன்ஜினியரிங் குழுவும் ஹரிதா சீட்டிங் நிறுவனமும் இணைந்து இன்டெலிசீட் என்ற அதிநவீன ஓட்டுநர் இருக்கையை உருவாக்கியுள்ளன. இந்த சாதனம் ஓட்டுநர் தூங்குவதற்கு முன்பே அவரது தசை அசைவுகள் மூலம் சோர்வைக் கண்டறிந்து எச்சரிக்கும்.
இன்டெலிசீட்
இன்டெலிசீட் தொழில்நுட்பம் எவ்வாறு செயல்படுகிறது?
வழக்கமான ஓட்டுநர் கண்காணிப்பு சாதனங்களைப் போல தலையில் பட்டை கட்டுவதோ அல்லது முகத்திற்கு எதிரே கேமராக்களைப் பொருத்துவதோ இந்த இருக்கைக்குத் தேவையில்லை.
இந்த இருக்கையின் உள்ளே மறைந்துள்ள நுட்பமான சென்சார்கள், ஓட்டுநர் அமர்ந்திருக்கும் விதம் மற்றும் சோர்வடையும் போது உடலில் ஏற்படும் சிறு அசைவுகளைத் துல்லியமாகக் கணிக்கின்றன.
ஐஐடி மெட்ராஸ் இயக்கியுள்ள இந்த ஐஓடி தொழில்நுட்பம், ஒயர்கள் எதுவுமின்றி வயர்லெஸ் முறையில் ஓட்டுநரின் நிலையைக் கண்காணிக்கிறது.
அறிவியல்
தசைச் சோர்வின் பின்னால் உள்ள அறிவியல் உண்மை
பொதுவாக அதிக நேரம் காரை ஓட்டும்போது லேக்டிக் அமிலம் சுரப்பதே சோர்வுக்குக் காரணம் எனக் கருதப்படுகிறது.
ஆனால், அது வெறும் அறிகுறி மட்டுமே என சென்னை ஐஐடி பேராசிரியர் வெங்கடேஷ் பாலாசுப்பிரமணியன் சுட்டிக்காட்டுகிறார்.
ஓட்டுநர் சோர்வடையும் போது தோள்பட்டை மற்றும் முதுகில் உள்ள தசைகளில் ஏற்படும் லேசான மின் சமிக்ஞைகளை (sEMG தொழில்நுட்பம்) இந்த இருக்கை உணர்கிறது.
தசை சோர்வடையும் போது ஓட்டுநரின் உடல் எடை இருக்கையில் மாறுபடுவதைக் கொண்டு ஆபத்து கணக்கிடப்படுகிறது.
எச்சரிக்கை
மூன்று கட்டங்களில் வழங்கப்படும் எச்சரிக்கை மணி
ஓட்டுநருக்கு சோர்வு ஏற்படும் போது இந்த இருக்கை மூன்று கட்டங்களில் எச்சரிக்கிறது.
லேசான சோர்வின் போது டேஷ்போர்டில் சிறிய விளக்கு எரியும். மிதமான சோர்வின் போது விளக்குடன் சேர்த்து ஒலி எச்சரிக்கையும் எழுப்பப்படும்.
தீவிரமான சோர்வு ஏற்படும் போது, இருக்கையே அதிரத் தொடங்கி ஓட்டுநரை விழிப்படைய செய்யும்.
அதே நேரத்தில், வாகன உரிமையாளரின் மொபைல் ஆப்பிற்கும் தகவல் அனுப்பப்பட்டு, வாகனத்தை உடனடியாக நிறுத்துமாறு அறிவுறுத்தப்படும்.
பழைய வாகனங்கள்
பழைய லாரிகள் மற்றும் பேருந்துகளில் பொருத்தும் வசதி
இந்த இன்டெலிசீட் சாதனம் வாகனத்தின் சொந்தக் கணினி அமைப்பை சார்ந்து இயங்காததால், இந்தியாவில் தற்போது பயன்பாட்டில் உள்ள பழைய லாரிகள், அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் கூட இதனை எளிதாகப் பொருத்த முடியும்.
இந்தியாவின் வீதிப் பாதுகாப்பை மேம்படுத்தவும், தூக்கமின்மையால் ஏற்படும் எண்ணற்ற உயிர் இழப்புகளைத் தடுக்கவும் சென்னை ஐஐடி விஞ்ஞானிகளின் இந்த உள்நாட்டுப் கண்டுபிடிப்பு மிகப்பெரிய வரப்பிரசாதமாகப் பார்க்கப்படுகிறது.