இஸ்ரேல் எல்லையில் வாழும் தனது நாட்டு மக்களுக்கு இந்தியா அறிவுரை
இஸ்ரேல் - லெபனான் எல்லைக்கு அருகே நடந்த ஏவுகணைத் தாக்குதலில் கேரளாவைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டதை அடுத்து, இஸ்ரேலில் உள்ள இந்தியர்களை பாதுகாப்பான பகுதிகளுக்குச் செல்லுமாறு மத்திய அரசு இன்று அறிவுறுத்தியுள்ளது. "தற்போதைய பாதுகாப்பு நிலைமை மற்றும் உள்ளூர் பாதுகாப்பு ஆலோசனைகளை கருத்தில் கொண்டு, இஸ்ரேலில் உள்ள அனைத்து இந்தியர்களும், குறிப்பாக வடக்கு மற்றும் தெற்கு எல்லைப் பகுதிகளில் இருப்பவர்கள், இஸ்ரேலுக்குள் இருக்கும் பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம்பெயர அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்தியர்கள் அனைவரின் பாதுகாப்பையும் இஸ்ரேல் அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்" என்று இஸ்ரேலில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. பலியானவர் கேரளாவின் கொல்லத்தை சேர்ந்த பட்னிபின் மேக்ஸ்வெல் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இஸ்ரேலில் உள்ள இந்திய தூதரகத்தின் பதிவு
இந்தியாவில் உள்ள இஸ்ரேல் தூதரகத்தின் அறிக்கை
இஸ்ரேல்- ஹமாஸ் போரில் ஏற்படும் முதல் இந்திய உயிரிழப்பு இதுவாகும். கேரளாவின் கொல்லத்தை சேர்ந்த ஒருவர் நேற்று வடக்கு இஸ்ரேலின் மார்கலியோட்டில் நடந்த ஏவுகணை தாக்குதலில் உயிரிழந்தார், ஹிஸ்புல்லா அமைப்பின் "கோழைத்தனமான" தாக்குதலில் கேரளாவைச் சேர்ந்த மேலும் இருவர் காயமடைந்ததாக இந்தியாவில் உள்ள இஸ்ரேல் தூதரகம் இன்று காலை வெளியான ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஏவுகணை தாக்குதலின் போது பாதிக்கப்பட்ட மூவரும் ஒரு பழத்தோட்டத்தை பயிரிட்டுக் கொண்டிருந்தனர் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்காக பிரார்த்தனை செய்வதாக இஸ்ரேல் தூதரகம் தெரிவித்துள்ளது.