1 வாரம் டிஜிட்டல் அரெஸ்ட்! முதிய தம்பதியை மிரட்டி ₹55.5 லட்சம் சுருட்டிய சைபர் கிரைம் கும்பல்
செய்தி முன்னோட்டம்
குஜராத் மாநிலம் ராஜ்கோட் பகுதியை சேர்ந்த 75 வயதான கீதாபென் பூபத்ராய் பாயானி மற்றும் அவரது கணவரை, மும்பை குற்றப்பிரிவு போலீஸ் அதிகாரிகள் போல நடித்த சைபர் கிரைம் குற்றவாளிகள் ஒரு வாரம் டிஜிட்டல் அரெஸ்ட்டில் வைத்து அவர்களின் ஆயுட்கால சேமிப்பான ₹55.50 லட்சத்தை ஏமாற்றிப் பறித்துள்ளனர். பயங்கரவாதம் மற்றும் சைபர் குற்றங்களில் தொடர்பிருப்பதாக மிரட்டி, ஆர்பிஐ பெயரில் போலி ஆவணங்களைக் காட்டி இச்சம்பவத்தை அவர்கள் அரங்கேற்றியுள்ளனர். கூடுதல் விபரங்கள் இங்கே:-
திட்டம்
வீட்டை விட்டு வெளியேற விடாமல் தீவிர மன உளைச்சல்
கடந்த ஆகஸ்ட் 18 அன்று வாட்ஸ்அப் அழைப்பு மூலம் தொடர்பு கொண்ட மோசடி கும்பல், வீட்டை விட்டு வெளியேறினாலோ அல்லது வேறு யாரிடமாவது கூறினாலோ உடனடியாகக் கைது செய்யப்படுவீர்கள் என மிரட்டியுள்ளது.
மேலும் தங்களது கூட்டாளிகள் வீட்டின் வெளியே கண்காணிப்பில் ஈடுபடுவதாகக் கூறி தம்பதியைத் தீவிர மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளனர்.
அச்சத்தின் காரணமாக முதிய தம்பதியினரும் தங்களின் வங்கி கணக்குகளில் இருந்த ₹55.50 லட்சத்தை பல்வேறு கணக்குகளுக்கு மாற்றியுள்ளனர்.
சைபர் கிரைம் கும்பல்
மேலும் ₹41 லட்சம் பறிக்கத் திட்டம் போட்ட கும்பல்
ஏற்கனவே மொத்த சேமிப்பையும் பறித்த பிறகும் திருப்தியடையாத குற்றவாளிகள், தம்பதியிடம் மேலும் ₹41 லட்சம் வழங்குமாறு கேட்டு மிரட்டலைத் தொடர்ந்துள்ளனர்.
வேறு வழியின்றி தங்களது பிக்சட் டெபாசிட்களை கரைத்து அந்தப் பணத்தைக் கொடுக்க தம்பதி ஆயத்தமாகியுள்ளனர்.
இதற்கிடையே பெற்றோர் இருக்கும் நிலையை உணர்ந்து சந்தேகமடைந்த மும்பையில் வசிக்கும் அவர்களின் மகள், உடனடியாக ராஜ்கோட் சைபர் கிரைம் போலீசாருக்குத் தகவல் கொடுத்துள்ளார்.
மகளின் சுதாரிப்பு
மகளின் சுதாரிப்பால் எஞ்சிய பணம் தப்பியது
தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் கதவைத் தட்டியபோது, பயத்தின் காரணமாக தம்பதியினர் கதவைத் திறக்கவே மறுத்துள்ளனர்.
பின்னர் அவர்களை சமாதானப்படுத்தி உண்மையான அதிகாரிகள் என்பதை உறுதிசெய்து வீட்டிற்குள் சென்ற போலீசார், அவர்கள் டிஜிட்டல் அரெஸ்ட் மோசடியில் சிக்கியிருப்பதை விளக்கியுள்ளனர்.
இதனால் மேலும் ₹41 லட்சம் கைநழுவிப் போவது தவிர்க்கப்பட்டது.
இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.