LOADING...
மேற்கத்திய இசைக்கருவியில் இந்துஸ்தானி புரட்சி! பத்ம விபூஷண் விருது பெற்ற வயலின் ஜாம்பவான் டாக்டர் என். ராஜம்
பத்ம விபூஷண் விருது பெற்ற வயலின் ஜாம்பவான் டாக்டர் என். ராஜம்

மேற்கத்திய இசைக்கருவியில் இந்துஸ்தானி புரட்சி! பத்ம விபூஷண் விருது பெற்ற வயலின் ஜாம்பவான் டாக்டர் என். ராஜம்

எழுதியவர் Venkatalakshmi V
May 22, 2026
07:43 am

செய்தி முன்னோட்டம்

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, 2026-ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை மே 25 அன்று வழங்குவார். இந்த ஆண்டு ஜனவரி மாதம், இந்திய அரசு ஐந்து பத்ம விபூஷன், 13 பத்ம பூஷன் மற்றும் 113 பத்மஸ்ரீ விருதுகள் உட்பட 131 பத்ம விருதுகளை அறிவித்தது. இந்த நிகழ்வில், இந்துஸ்தானி செவ்வியல் இசையுலகின் முடிசூடா ராணியாகவும், வயலின் இசைக்கருவியில் புதிய புரட்சியை ஏற்படுத்தியவருமான டாக்டர் என். ராஜமிற்கு, நாட்டின் இரண்டாவது மிக உயரிய குடிமை விருதான 'பத்ம விபூஷண்' வழங்கி கௌரவிக்கப்படவுள்ளது. இந்த உயரிய அங்கீகாரத்தை விவரித்த அவர், "இந்த விருது எனது பெற்றோர்கள் மற்றும் குருமார்களின் ஆசியால் மட்டுமே சாத்தியமானது" என்று நெகிழ்ச்சியுடன் தனது நன்றியை அர்ப்பணித்துள்ளார். அவரைப்பற்றி ஒரு தொகுப்பு:

இசைப்பயணம்

வயலினில் 'காய்கி அங்' புரட்சி

ஏப்ரல் 8, 1938 அன்று சென்னையில் பிறந்த டாக்டர் என். ராஜம், கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக மும்பை தானே பகுதியில் வசித்து வருகிறார். இந்துஸ்தானி செவ்வியல் இசையில் குரலிசைக்கு மட்டுமே இருந்த முக்கியத்துவத்தை, மேற்கத்திய இசைக்கருவியான வயலினுக்கு மாற்றிய பெருமை டாக்டர் ராஜத்தையே சேரும். தனது 15-வது வயதிலேயே மேடையேறிய அவர், வயலினில் 'காய்கி அங்'முறையை மிக நேர்த்தியாக அறிமுகப்படுத்தினார். இவரது இந்த அசாத்திய தொழில்நுட்பத்தைக் கண்டு வியந்த பல வயலின் கலைஞர்கள் தங்களது பழைய 'கட்காரி' பாணியைக் கைவிட்டு, ராஜத்தின் பாணியைப் பின்பற்றத் தொடங்கினர். இவரது அபார திறமையைக் கண்டு வியந்த புகழ்பெற்ற குரலிசை மேதை பண்டிட் ஓம்கார்நாத் தாகூர், ராஜத்தைத் தனது சீடராக ஏற்றுக்கொண்டார்.

சாதனை

சாதனைகளும், தேடி வந்த தேசிய அங்கீகாரங்களும்

டாக்டர் ராஜம் சமஸ்கிருதத்தில் முதுகலைப் பட்டமும், இசையில் முனைவர் பட்டமும் பெற்ற ஒரு சிறந்த கல்வியாளர் ஆவார். பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் சுமார் 40 ஆண்டுகள் பேராசிரியராக, துறைத் தலைவராக மற்றும் கலைப் புலத்தின் டீனாக பணியாற்றியுள்ளார். பல்கலைக்கழகம் இவருக்கு 'எமரிட்டஸ் பேராசிரியர்' பட்டத்தையும், மாளவியா விருதையும் வழங்கிச் சிறப்பித்துள்ளது. இவர் 1984ஆம் ஆண்டிலேயே பத்மஸ்ரீ விருது பெற்றுள்ளார். தொடர்ந்து 1990ஆம் ஆண்டு சங்கீத நாடக அகாடமி விருது, 2004ஆம் ஆண்டு பத்ம பூஷண், 2012ஆம் ஆண்டு சங்கீத நாடக அகாடமி பெல்லோஷிப் விருதும் பெற்றுள்ளார். ஆண் ஆதிக்கம் நிறைந்த இசை மற்றும் கல்வித் துறையில் ஒரு பெண்ணாகத் தனது கடின உழைப்பால் அரை நூற்றாண்டுக்கும் மேலாகத் தனி முத்திரை பதித்தவர் ராஜம்.

Advertisement

விருதுகள் முயற்சி

#PeoplesPadma என்பது என்ன?

அடித்தட்டு சாதனையாளர்களுக்குப் பொது மற்றும் சுய பரிந்துரைகளை ஊக்குவிப்பதன் மூலம் பத்ம விருதுகளை மேலும் அனைவரையும் உள்ளடக்கியதாக மாற்றுவதற்காக, இந்திய அரசால் #PeoplesPadma அல்லது மக்கள் பத்ம முயற்சி தொடங்கப்பட்டது. இதன் மூலம், தேசிய அளவில் அறியப்பட்ட ஆளுமைகளுடன், அதிகம் அறியப்படாத நாயகர்களையும் அடித்தட்டுப் பங்களிப்பாளர்களையும் முன்னிலைப்படுத்துகிறது. இந்த விருதுகள், இனம், தொழில், பதவி அல்லது பாலினம் என்ற பாகுபாடின்றி, அனைத்துத் துறைகளிலும் உள்ள சிறப்புகளை அங்கீகரிக்கின்றன. வெளிச்சத்திற்கு வராமல், சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்திய தனிநபர்களைக் கௌரவிப்பதன் மூலம், பத்மா விருதுகளை 'PeoplesPadma'வாக மாற்றுவதே இதன் பரந்த நோக்கமாகும்.

Advertisement