ஐபிஎல் 2023 கிரிக்கெட்போட்டியை காண பாஸ் கொடுங்கள் - எஸ்.பி.வேலுமணி கோரிக்கை
தமிழ்நாடு சட்டசபையில் இன்று(ஏப்ரல்.,11) விளையாட்டுத்துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடத்தப்பட்டது. அப்போது பேசிய எஸ்.பி.வேலுமணி அதிமுக ஆட்சியின் பொழுது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை காண எம்.எல்.ஏ.க்களுக்கு பாஸ்கள் வழங்கப்பட்டது. இந்த ஆண்டும் பாஸ்கள் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் கொடுக்கப்பட்ட 300 பாஸ்களில் ஒன்று கூட அதிமுக'வை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கு வந்து சேரவில்லை. இதற்கு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார் என்று கூறப்படுகிறது. எஸ்.பி.வேலுமணி வைத்த கோரிக்கைக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வேடிக்கையான ஓர் பதிலினை கூறியுள்ளார்.
சட்டசபையில் கிண்டலாக பதிலளித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
எஸ்.பி.வேலுமணி வைத்த கோரிக்கைக்கு பதிலளித்த உதயநிதி ஸ்டாலின், உங்களது நெருங்கிய நண்பர் அமீத்ஷாவின் மகன் ஜெய்ஷா தான் பிசிசிஐ தலைவராக உள்ளார். அவரிடம் பேசி எங்களுக்கும் ஐபிஎல் டிக்கெட்களை வாங்கி தாருங்கள் என்று வேடிக்கையாக பதிலளித்தார். மேலும் நான்கு வருடங்களாக போட்டிகள் நடக்கவில்லை. நீங்கள் யாருக்கு டிக்கெட் வாங்கி தந்தீர்கள் என்று தெரியவில்லை என்றும் அவர் கிண்டலாக பேசியுள்ளார். இதற்கிடையே ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் கேட்கவா தொகுதி மக்கள் உங்களை சட்டமன்றத்திற்கு அனுப்பினார்கள் என்று எஸ்.பி.வேலுமணியினை நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.