சேலம் அரசு மருத்துவமனை ஆவின் பாலகத்தில் திடீர் சோதனை நடத்திய அதிகாரிகள்
சேலம் அரசு மருத்துவமனையில் சுற்றுவட்டார மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் தினமும் சிகிச்சைப்பெற்று வருகிறார்கள். இந்த வளாகத்தில் ஆவின் பாலகம் ஒன்றும் இயங்கி வருகிறது. இங்கு திடீரென இன்று(ஏப்ரல்.,26)உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் சோதனையினை மேற்கொண்டனர். இதில் காலாவதி தேதி குறிப்பிடாமல் விற்பனைச்செய்ய வைக்கப்பட்டிருந்த குளிர்பானங்கள், 50க்கும் மேற்பட்ட பிரட் பாக்கெட்டுகள்,தேநீர்,காபி தயாரிக்க முறையாக பராமரிக்காமல் ப்ரீசரில் வைக்கப்பட்டிருந்த 10லிட்டருக்கும் மேற்பட்ட பால் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளதாக தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. மேலும் பறிமுதல் செய்யப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தும் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்படும். அதன் முடிவுகள் வெளியானப்பின்னரே அதற்கேற்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து இதுகுறித்து தகுந்த விளக்கமளிக்க ஆவின் பாலகத்திற்கு நோட்டீஸும் அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.