நீட் தேர்வுக்காக டெலிகிராமுக்கு 5 நாட்கள் தடை: மத்திய அரசின் முடிவுக்கு டெல்லி ஹைகோர்ட் க்ரீன் சிக்னல்
செய்தி முன்னோட்டம்
ஜூன் 21 அன்று நடைபெறவிருக்கும் நீட்-யுஜி (NEET-UG) மறுதேர்வின் போது, வினாத்தாள் கசிவு அல்லது முறைகேடுகள் ஏதும் நடப்பதைத் தடுக்கும் நோக்கில், டெலிகிராம் செயலியை 5 நாட்களுக்கு தற்காலிகமாக முடக்க மத்திய அரசு எடுத்த முடிவை டெல்லி உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உறுதி செய்துள்ளது. தேர்வு செயல்பாடுகளின் போது தளம் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க இந்த நடவடிக்கை அவசியம் என்ற அரசின் வாதத்தை நீதிமன்றம் முழுமையாக ஏற்றுக்கொண்டது. இந்தத் தற்காலிகத் தடையின் சட்டப்பூர்வத்தன்மை மற்றும் அதன்விகிதாச்சாரம் குறித்த விரிவான வாதங்களைக் கேட்டறிந்த டெல்லி உயர் நீதிமன்றம், இந்தத் தடை உத்தரவு செல்லுபடியாகும் எனத் தீர்ப்பளித்தது.
நடவடிக்கை
அவசரகால நடவடிக்கை மற்றும் நீதிமன்றத்தின் அவதானிப்பு
நீதிமன்றம் தனது தீர்ப்பில்,"அவசரகாலச் சூழ்நிலைகளைக் கருத்தில் கொள்ளும்போது, டெலிகிராம் செயலிக்கு விதிக்கப்பட்ட இந்தத் தற்காலிகத் தடை விகிதாச்சாரத்திற்கு அப்பாற்பட்டது என்று கூற முடியாது. தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் (IT Act) பிரிவு 69A-இன் கீழ் பரிந்துரைக்கப்பட்ட நடைமுறைகளைப் பின்பற்றியே மத்திய அரசு இந்த முடக்க உத்தரவை பிறப்பித்துள்ளது. இதற்கான காரணங்கள் போதுமானதாக உள்ளன." காரணங்களை வெளிப்படுத்தவில்லை என்ற டெலிகிராம் தரப்பு ஆட்சேபனைகளை நிராகரித்த நீதிமன்றம், இந்த முடக்க உத்தரவு முறையான சிந்தனையுடனே பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும், ஐடி சட்டத்தின் கீழ் இத்தகைய தளங்களைத் தற்காலிகமாக முடக்குவதற்கு முழு அதிகாரம் உள்ளது என்றும் தெளிவுபடுத்தியது.
முன்னெச்சரிக்கை
நீட் தேர்வுக்கான முன்னெச்சரிக்கை
தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் (NEET) முன்னதாக எழுந்த வினாத்தாள் கசிவு சர்ச்சைகளைத் தொடர்ந்து, இந்த மறுதேர்வை எவ்வித புகாருமின்றி நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. குறிப்பாக, சமூக வலைதளங்களில் ரகசியக் குழுக்கள் மூலம் வினாத்தாள்கள் பரப்பப்படுவதைத் தடுக்கவே இந்த 5 நாட்கள் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தேர்வு முடிந்தவுடன் இந்தத் தடை தானாகவே நீக்கப்படும் எனத் தெரிகிறது.