LOADING...
டெல்லியில் பரபரப்பு! வங்கதேச பிரதமரின் ஆலோசகரை 2 மணி நேரம் சிறைபிடித்த அதிரடி சோதனை
டெல்லி விமான நிலையத்தில் வங்கதேச பிரதமரின் ஆலோசகர் நிறுத்தம்

டெல்லியில் பரபரப்பு! வங்கதேச பிரதமரின் ஆலோசகரை 2 மணி நேரம் சிறைபிடித்த அதிரடி சோதனை

எழுதியவர் Sekar Chinnappan
Jun 15, 2026
07:11 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசத்தில் அண்மையில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களுக்குப் பிறகு, இருதரப்பு உறவுகளை சீரமைக்கப் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்தகைய இக்கட்டான சூழலில், டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் வங்கதேசப் பிரதமர் தாரிக் ரஹ்மானின் மூத்த கொள்கை மற்றும் மூலோபாய விவகாரங்களுக்கான ஆலோசகர் ஜாகேத் உர் ரஹ்மான் குடிவரவு அதிகாரிகளால் திடீரென தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம் இரு நாடுகளுக்கு இடையே கடுமையான புதிய ராஜதந்திர சர்ச்சையை வெடிக்கச் செய்துள்ளது. இந்த அவமரியாதைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், அந்த ஆலோசகர் இந்தியாவுக்குள் நுழைய மறுத்து உடனடியாக டாக்காவிற்குத் திரும்பியுள்ளார்.

ஐஓஆர்ஏ மாநாடு

ஐஓஆர்ஏ மாநாட்டில் பங்கேற்க வந்த இடத்தில் நேர்ந்த அவமானம்

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் ஜூன் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் டெல்லியில் நடத்தத் திட்டமிட்டிருந்த 28 வது இந்தியப் பெருங்கடல் ரீம் அசோசியேஷன் (ஐஓஆர்ஏ) மூத்த அதிகாரிகள் கூட்டத்தில், வங்கதேச தூதுக்குழுவின் தலைவராகப் பங்கேற்கவே ஜாகேத் உர் ரஹ்மான் ஞாயிற்றுக்கிழமை மாலை டெல்லி வந்தடைந்தார். இவரின் வருகை மற்றும் மாநாட்டுப் பங்களிப்பு குறித்து வங்கதேச தூதரகம் கடந்த வெள்ளிக்கிழமையே இந்திய வெளியுறவு அமைச்சகத்திற்கு அதிகாரப்பூர்வமாகத் தூதரகக் குறிப்பு மூலம் முன்கூட்டியே தெளிவாகத் தெரிவித்திருந்தது. இருப்பினும், அவர் டெல்லி விமான நிலையத்தின் இமிக்ரேஷன் கவுன்ட்டரை வந்தடைந்த போது அதிகாரிகள் அவரை தனியாக அழைத்துச் சென்று தீவிர சோதனை வளையத்திற்குள் கொண்டு வந்தனர்.

பாதுகாப்பு கண்காணிப்பு பட்டியல்

பாதுகாப்பு கண்காணிப்புப் பட்டியலும் இரண்டரை மணி நேர இழுபறியும்

டெல்லி விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் முறையான எவ்வித விளக்கமும் அளிக்கப்படாமல், ஜாகேத் உர் ரஹ்மான் கிட்டத்தட்ட இரண்டரை மணி நேரம் ஒரு தனி அறையில் காத்திருக்க வைக்கப்பட்டார். இந்திய ஊடகங்களின் கூற்றுப்படி, அவர் தூதரக பாஸ்போர்ட்டிற்குப் பதிலாக சார்க் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட சாதாரண பச்சை நிற பாஸ்போர்ட்டில் பயணித்ததாகவும், சரிபார்ப்பின் போது அவரது பெயர் இந்தியாவின் பாதுகாப்பு கண்காணிப்புப் பட்டியலில் தற்செயலாகக் காட்டியதே இந்தத் தாமதத்திற்குக் காரணம் என்றும் கூறப்படுகிறது. பின்னர், டெல்லியில் உள்ள வங்கதேச தூதர் ஆர்.ஹமிதுல்லா தலையிட்டு அடையாளத்தை உறுதிப்படுத்தியதாலும், உயர் அதிகாரிகளின் அவசர உத்தரவாலும் அவருக்கு இந்தியாவுக்குள் நுழைய அனுமதி வழங்கப்பட்டது.

Advertisement

நாடு திரும்பல்

இந்தியாவின் அனுமதியை நிராகரித்து டாக்காவிற்குத் திரும்பிய ஆலோசகர்

குடிவரவு அதிகாரிகளின் இந்தத் தர்மசங்கடமான மற்றும் மரியாதையற்ற நடத்தையால் அதிருப்தியடைந்த ஆலோசகர் ஜாகேத் உர் ரஹ்மான், தனக்கு வழங்கப்பட்ட அனுமதியை நிராகரித்தார். இந்தியாவின் அழைப்பை ஏற்று அதிகாரப்பூர்வமாக வந்த தனக்கு உரிய ராஜதந்திர மரியாதை வழங்கப்படவில்லை எனக் கூறி, அவர் டெல்லிக்குள் கால் பதிக்காமல் தனது பாஸ்போர்ட்டைத் திரும்பப் பெற்றுக்கொண்டு, கொழும்பு வழியாக உடனடியாகத் டாக்காவுக்குத் திரும்பப் புறப்பட்டார். ஒரு நாட்டின் பிரதமரின் உயர்மட்ட ஆலோசகருக்கு ஏற்பட்ட இந்த கசப்பான சம்பவம், வங்கதேச தேசியவாதக் கட்சி தலைமையிலான புதிய அரசைப் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Advertisement

இந்திய தூதருக்கு சம்மன்

டாக்காவில் உள்ள இந்தியத் தூதருக்கு அவசர சம்மன் அனுப்பிய வங்கதேசம்

இந்தச் சம்பவம் டாக்காவில் காட்டுத்தீயாகப் பரவியதை அடுத்து, வங்கதேச வெளியுறவுத்துறை அமைச்சகம் டாக்காவில் உள்ள இந்தியத் துணைத் தூதர் பவன் பதேவை அவசரமாகத் நேரில் வரவழைத்துத் தங்களின் கடுமையான கண்டனத்தையும், ஆழ்ந்த ஏமாற்றத்தையும் அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்துள்ளது. இது குறித்துப் பேசிய வங்கதேச வெளியுறவுத்துறை அமைச்சர் கலிலூர் ரஹ்மான், அதிகாரப்பூர்வ தூதருக்கு டெல்லி விமான நிலையத்தில் நேர்ந்த இந்த அசம்பாவிதம் மிகவும் துரதிர்ஷ்டவசமானது மற்றும் முற்றிலும் எதிர்பார்க்காத ஒன்று என்று சாடியுள்ளார். கடந்த பிப்ரவரியில் தாரிக் ரஹ்மான் பிரதமராகப் பொறுப்பேற்ற பிறகு, இந்தியாவிற்கும் புதிய வங்கதேச அரசுக்கும் இடையே அரங்கேறும் முதல் மிகப்பாரிய ராஜதந்திர மோதல் இதுவாகும்.

Advertisement