தமிழக முதல்வர் விஜயின் லண்டன் பயணம் வெற்றி: ரூ.15,300 கோடி முதலீடுகள் ஈர்ப்பு, 10,000 பேருக்கு வேலைவாய்ப்பு
செய்தி முன்னோட்டம்
தமிழக முதல்வர் விஜய் மேற்கொண்ட லண்டன் அரசுமுறை பயணத்தின் வாயிலாக ரூ.15,300 கோடிக்கும் அதிகமான முதலீட்டு முன்மொழிவுகள் மற்றும் உறுதிமொழிகள் பெறப்பட்டுள்ளன. இதன் மூலம் தமிழகத்தில் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 10,000 பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. லண்டனில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் சந்திப்பின் போது, தமிழக அரசின் முதலீட்டு மேம்பாட்டு முகமையான 'வழிகாட்டி' (Guidance Tamil Nadu) நிறுவனத்திற்கும் முன்னணி சர்வதேச நிறுவனங்களுக்கும் இடையே முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MoUs) மற்றும் விருப்பக் கடிதங்கள் கையெழுத்தாகின.
முதலீடு
பிரதான முதலீடுகள் மற்றும் வேலைவாய்ப்பு விவரங்கள்
சம்வர்தனா மதர்சன் இன்டர்நேஷனல்: இந்நிறுவனம் தமிழகத்தில் ரூ.11,000 கோடி மதிப்பில் புதிய முதலீடுகளைச் செய்யவுள்ளது. இதன் மூலம் 7,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
வில்சன் பவர் சொல்யூஷன்ஸ்: திருவள்ளூர் மாவட்டத்தில் ட்ரான்ஸ்ஃபார்மர் உற்பத்தி ஆலை அமைப்பதற்காக ரூ.300 கோடி முதலீடு செய்கிறது. இதன் வாயிலாக 400 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாவதோடு உற்பத்திப் பணிகள் தீவிரமடையும்.
சிக்மா டெக்னாலஜி & எர்ன்ஸ்ட் யங் ஆகிய நிறுவனங்களுடன் திறன் மையங்களை விரிவுபடுத்துவதற்காகப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் 600 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
ஐரோப்பாவின் முன்னணி வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பு நிறுவனம் ஒன்று இந்தியாவில் மேற்கொள்ள உள்ள ரூ.3,000 கோடி முதலீட்டிற்கு தமிழகத்தை முதன்மைத் தேர்வாகக் கருதி விருப்பக் கடிதம் அளித்துள்ளது.
ஹிந்துஜா குழுமம்
ஹிந்துஜா குழுமத்துடனான உயர்மட்டச் சந்திப்பு
இந்தச் சந்திப்பின் போது அசோக் லேலண்ட் நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் தீரஜ் ஹிந்துஜா, பினோலெக்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் பிரகாஷ் சாப்ரியா, இயக்குநர் ரீட்டா ஹிந்துஜா சாப்ரியா மற்றும் ஹிந்துஜா குழுமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் ஆகியோர் முதல்வர் விஜயைச் சந்தித்துப் பேசினர்.
அப்போது, தமிழகத்தில் ஹிந்துஜா குழுமம் ஏற்கனவே மேற்கொண்டுள்ள முதலீடுகளின் தற்போதைய முன்னேற்ற நிலைகள் குறித்தும், புதிய திட்டங்கள் குறித்தும் முதல்வரிடம் விரிவாக விளக்கம் அளிக்கப்பட்டது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் முன்னிலையில், தமிழ்நாட்டில் உற்பத்தி ஆலைகள், உலகளாவிய திறன் மையங்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு வசதிகளை நிறுவி விரிவுபடுத்துவதற்காக, தமிழ்நாடு அரசுக்கும் முன்னணி உலகளாவிய நிறுவனங்களுக்கும் இடையே புரிந்துணர்வு… pic.twitter.com/YXlYKUGBpY
— CMOTamilNadu (@CMOTamilnadu) September 15, 2026