கட்சிகளின் கடும் எதிர்ப்பு காரணமாக ஜோதிடர் நியமனத்தை ரத்து செய்த முதல்வர் விஜய்: பின்னணி என்ன?
செய்தி முன்னோட்டம்
முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், தனது அரசியல் பிரிவு தனி அலுவலராக (OSD) நியமிக்கப்பட்டிருந்த ஜோதிடர் ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேலின் நியமனத்தை ரத்து செய்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கூட்டணி கட்சிகள் மற்றும் எதிர்க்கட்சிகளிடமிருந்து எழுந்த கடுமையான விமர்சனங்களைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஒரு ஜோதிடர் அரசுப் பதவியில் அமர்த்தப்படுவது நிர்வாக ரீதியாகவும், கொள்கை ரீதியாகவும் ஏற்புடையது அல்ல எனப் பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வந்தனர். தவெக அரசு தனது பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று சட்டசபையில் நடைபெற்றபோதும் இது குறித்து தேமுதிக MLAவும், பொதுசெயலாளருமான பிரேமலதா இது குறித்து கண்டனம் தெரிவித்திருந்தார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#BREAKING | கடும் எதிர்ப்புக்கு பணிந்த தவெக அரசு
— Sun News (@sunnewstamil) May 13, 2026
முதலமைச்சர் விஜயின் ஜோதிடர் ராதன் பண்டிட்-ஐ அரசுப் பணியில் நியமனம் செய்த உத்தரவு வாபஸ்#SunNews | #TVKGovt | #RadhanPandit | #Vijay pic.twitter.com/WqaWfqJJXM
போர்க்கொடி
கூட்டணி கட்சிகளின் போர்க்கொடி
பண்டிட் வெற்றிவேல் நியமிக்கப்பட்ட ஒரே நாளில் இந்த சர்ச்சை வெடித்தது. தவெக அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவு அளிக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (VCK), சிபிஐ (CPI) மற்றும் சிபிஎம் (CPIM) ஆகிய கட்சிகள் இந்த நியமனத்திற்குப் பகிரங்கமாக எதிர்ப்புத் தெரிவித்தன. விசிக நிலைப்பாடு: விசிக எம்.எல்.ஏ வாணி அரசு பேசுகையில், "அரசு அறிவியல் பூர்வமான மற்றும் பகுத்தறிவு சிந்தனைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டுமே தவிர, ஜோதிடத்திற்கு அல்ல" என்று வலியுறுத்தினார். இடதுசாரிகள் கண்டனம்: "பொதுமக்களின் வரிப்பணத்தில் ஒரு ஜோதிடரை அரசுப் பதவியில் அமர்த்துவது மூடநம்பிக்கையை ஊக்குவிக்கும் செயல்" என்று சிபிஎம் மாநிலச் செயலாளர் பி. சண்முகம் மற்றும் சிபிஐ மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் ஆகியோர் சுட்டிக்காட்டினர்.
அதிரடி
நம்பிக்கை வாக்கெடுப்பு நேரத்தில் அதிரடி
சட்டமன்றத்தில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு நடக்கும் நேரத்தில், கூட்டணி கட்சிகளின் அதிருப்தியைச் சம்பாதிக்க முதல்வர் விஜய் விரும்பவில்லை எனக் கருதப்படுகிறது. அதோடு DMDK பொதுச்செயலாளர் பிரேமலதா அவையில் இதுகுறித்து எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் நேரத்தில், முதல்வர் "I will rethink about it" என பதிலளித்திருந்தார். அதை தொடர்ந்து அவை ஒத்திவைக்கப்பட்டதுமே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. கூட்டணி கட்சிகளின் கோரிக்கைக்கு மதிப்பளித்தும், சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் இந்த நியமனம் ரத்து செய்யப்பட்டுள்ளது என கூறப்படுகிறது.