விவசாயிகளுக்கு ஜாக்பாட்! பயிர்க்கடன் தள்ளுபடி வரம்பை ரூ.75,000 ஆக உயர்த்தி முதலமைச்சர் விஜய் உத்தரவு
செய்தி முன்னோட்டம்
தமிழக விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையினை ஏற்று, கூட்டுறவு வங்கிகளின் மூலம் பயிர்க்கடன் பெற்ற குறு, சிறு மற்றும் இதர பெரு விவசாயிகளுக்கு 100 விழுக்காடு முழுமையாகப் பயிர்க்கடன் தள்ளுபடி வழங்கி தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதற்கான அதிகபட்ச தள்ளுபடி வரம்பு 75,000 ரூபாய் ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த அறிவிப்பால் ஒட்டுமொத்தமாக 14,43,504 விவசாயிகள் நேரடியாகக் கடன் சுமையில் இருந்து விடுபடவுள்ளனர். இதனால் தமிழக அரசுக்கு கூடுதலாக 5,932.23 கோடி ரூபாய் செலவினம் ஏற்படும் எனத் தமிழக அரசு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
கூட்டுறவு வங்கிகளின் மூலம் ரூ.75,000/- வரை பயிர்க்கடன் பெற்ற குறு, சிறு மற்றும் இதர பெரு விவசாயிகளுக்கு 100 சதவீதம் முழுமையாக பயிர்க்கடன் தள்ளுபடி செய்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் அறிவிப்பு#CMJosephVijay pic.twitter.com/81mtpmhO1p
— CMOTamilNadu (@CMOTamilnadu) June 16, 2026
மறுஆய்வு
திட்டம் மறுஆய்வு செய்யப்பட்டது ஏன்?
கடந்த மே 25, 2026 அன்று தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில், ரூ.50,000 வரை பயிர்க்கடன் பெற்ற குறு, சிறு விவசாயிகளுக்கு மட்டுமே கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், இந்த வரம்பை உயர்த்த வேண்டும் என மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் விவசாய அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளிடம் இருந்து கோரிக்கைகள் குவிந்தன. இக்கோரிக்கைகளை பரிசீலித்த முதலமைச்சர் விஜய், ஜூன் 15 அன்று தலைமைச் செயலகத்தில் உயர்மட்ட மறுஆய்வுக் கூட்டத்தைக் கூட்டினார். வேளாண்மை - உழவர் நலத்துறை, கூட்டுறவுத் துறை மற்றும் நிதித்துறை அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட இந்த ஆலோசனையைத் தொடர்ந்து, தற்போதைய நிதி நெருக்கடியிலும் விவசாயிகளின் நலன் கருதி இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
விவரங்கள்
புதிய தள்ளுபடி விவரங்கள் மற்றும் பலன்கள்
RBI-யின் வழிகாட்டுதல்களின்படி, தள்ளுபடி தொகையை அரசு 45 முதல் 60 நாட்களுக்குள் கூட்டுறவு வங்கிகளுக்குச் செலுத்த வேண்டும். 2025 மே 1 முதல் 2026 பிப்ரவரி 28 வரை கடன் பெற்ற 14.43 லட்சம் விவசாயிகளுக்குப் பலன் தரும் வகையில் ரூ.6,000 கோடி நிதி ஒதுக்கீட்டில் கீழ்க்கண்டவாறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கூட்டுறவு வங்கிகளில் ரூ.75,000 வரை கடன் பெற்ற குறு, சிறு மற்றும் இதர பெரு விவசாயிகள்பெற்ற ஒட்டுமொத்தக் கடன் தொகையும் 100% முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும். ரூ.75,000-க்கு மேல் கடன் பெற்றவர்களுக்கு அதிகபட்சமாக 35,000 ரூபாய் வரை தள்ளுபடி வழங்கப்படும். இதன் மூலம் கடந்த நிதியாண்டில் பயிர்க்கடன் பெற்ற அனைத்து விவசாயிகளுக்கும் அதிகபட்சமாக ரூ.75,000-மும், குறைந்தபட்சமாக ரூ.35,000-மும் நேரடிப் பணப்பயனாக கிடைக்கும்.