Loading...
கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்யவேண்டும்: மத்திய அரசிடம் கெடு விதித்த CJP
மத்திய அரசிடம் கெடு விதித்த CJP

கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்யவேண்டும்: மத்திய அரசிடம் கெடு விதித்த CJP

எழுதியவர் Venkatalakshmi V
Jul 24, 2026
03:11 pm

செய்தி முன்னோட்டம்

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவை வலியுறுத்திப் போராடி வரும் 'காக்ரோச் ஜனதா கட்சி' (CJP), தனது முதன்மை கோரிக்கை குறித்து பதிலளிக்க மத்திய அரசுக்கு சனிக்கிழமை பிற்பகல் வரை கெடு விதித்துள்ளது. டெல்லியில் உள்ள விட்டல் படேல் பவனில் மத்திய அமைச்சர்கள் ஜே.பி. நட்டா மற்றும் ஜிதேந்திர சிங் ஆகியோருடன் CJP பிரதிநிதிகள் நடத்திய இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தைக்கு பிறகு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நிலைப்பாடு

முக்கியக் கோரிக்கைகளும் அரசின் நிலைப்பாடும்

இப்பேச்சுவார்த்தையில் CJP அமைப்பின் தலைமை செய்தித் தொடர்பாளர் சௌரவ் தாஸ் மற்றும் அசுதோஷ் ரங்கா ஆகியோர் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில், கல்வி அமைச்சரின் ராஜினாமா, நீட் விவகாரத்தால் பாதிக்கப்பட்ட மாணவர் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குதல் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீதான வழக்குகளைத் திரும்பப் பெறுதல் ஆகிய மூன்று முக்கியக் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

இதில் அமைதியான முறையில் போராடிய மாணவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படாது என்றும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்றும் அரசு தரப்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

கோரிக்கை

ராஜினாமா கோரிக்கையும் அரசின் கெடுவும்

இருப்பினும், கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமா கோரிக்கை குறித்து முடிவெடுக்க மத்திய அரசு சனிக்கிழமை பிற்பகல் வரை அவகாசம் கேட்டுள்ளதாக CJP தெரிவிப்பாளர் சௌரவ் தாஸ் கூறியுள்ளார்.

அமைச்சர் ராஜினாமா செய்யத் தவறினால், நாடு தழுவிய அளவிலான போராட்டங்கள் மேலும் தீவிரமடையும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் தனது 26 நாள் உண்ணாவிரத போராட்டத்தை முடித்துக் கொண்டதைத் தொடர்ந்து, இப்போராட்டத்திற்குத் தீர்வு காணும் முயற்சிகளில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

அதேவேளையில், வினாத்தாள் கசிவு வழக்குகளை விரைவாக விசாரிக்க விரைவு நீதிமன்றங்களை அமைக்க அரசு திட்டமிட்டுள்ள போதிலும், கல்வி அமைச்சரின் ராஜினாமாவில் CJP உறுதியாக இருப்பதால் டெல்லியில் அரசியல் பரபரப்பு நீடிக்கிறது.

ADVERTISEMENT