பொதுத் தேர்வுகளில் முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி! மக்களிடம் கருத்து கேட்கிறது மத்திய அரசு
செய்தி முன்னோட்டம்
தேசிய தேர்வுகள் முகமை (NTA) நடத்தும் தேர்வுகள் உட்பட நாட்டின் பொதுத் தேர்வு முறைகளில் விரிவான சீர்திருத்தங்களை மேற்கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காகத் தகவல் தொழில்நுட்ப வல்லுநர் நந்தன் நிலேகனி தலைமையில் உயர் மட்டப் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு தேர்வுகளின் பாதுகாப்பு, வடிவமைப்பு, ஆளுகை மற்றும் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவது குறித்து மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து ஆலோசனைகளையும் கருத்துகளையும் வரவேற்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
யார் சமர்ப்பிக்கலாம்?
கருத்துகளை சமர்ப்பிக்கத் தகுதியானவர்கள் யார்?
தேர்வு முறையை மேலும் வலுப்படுத்தவும், முறைகேடுகளைத் தடுக்கவும் விரிவான பொதுக் கலந்தாய்வு தொடங்கப்பட்டுள்ளது.
இப்போட்டித் தேர்வுகளில் பங்கேற்கும் மாணவர்கள், அவர்களின் பெற்றோர்கள், ஆசிரியர்கள், கல்வி நிறுவனங்கள், தேர்வு நடத்தும் அமைப்புகள், பாட வல்லுநர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் தங்களின் ஆக்கப்பூர்வமான கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளலாம்.
சமூக, பொருளாதார மற்றும் பிராந்திய வேறுபாடுகளின்றி அனைத்து மாணவர்களுக்கும் சமமான வாய்ப்பை வழங்கும் வகையில் இந்த சீர்திருத்தங்கள் திட்டமிடப்பட்டு வருகின்றன.
முக்கிய துறைகள்
முக்கியமாகக் கவனம் செலுத்தப்படும் துறைகள்
பொதுத் தேர்வுகளின் பாதுகாப்பு மற்றும் நடத்தப்படும் முறைகள், மதிப்பீட்டு முறைகள், முறைகேடுகளைக் கண்டறிந்து தடுக்கும் தொழில்நுட்பங்கள் ஆகிய துறைகளில் கருத்துகள் கேட்கப்படுகின்றன.
மேலும், பாதுகாப்பான கணினி வழித் தேர்வுகள், தேர்வு மையக் கட்டமைப்புகளை மேம்படுத்துதல், வெளிப்படைத்தன்மை, மாணவர்களின் மனநலனைப் பாதுகாத்தல் மற்றும் குறைதீர்க்கும் வழிமுறைகள் தொடர்பாகவும் ஆலோசனைகளை வழங்கலாம்.
பெறப்படும் அனைத்துப் பரிந்துரைகளும் அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்படவுள்ள இறுதியறிக்கையில் பயன்படுத்தப்படும்.
வழிமுறைகள்
கருத்துகளை அனுப்ப வேண்டிய வழிமுறைகள் மற்றும் கடைசி நாள்
ஆர்வமுள்ள பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் வரும் செப்டம்பர் 13, 2026-க்குள் தங்களின் ஆலோசனைகளை சமர்ப்பிக்க வேண்டும்.
ஆங்கிலம், இந்தி மற்றும் தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் examreforms-taskforce.dopt.gov.in என்ற இணையதளம் மூலமாகவோ, 1800-180-4747 என்ற கட்டணமில்லாத் தொலைபேசி எண், +91 78270 42830 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு hptf என செய்தி அனுப்பியோ அல்லது ExamReformsTaskforce@dopt.gov.in என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவோ தங்களின் கருத்துகளை எளிதாக அனுப்பி வைக்கலாம்.