மாணவர்களின் பாதுகாப்பே முக்கியம்! வளைகுடா நாடுகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து
செய்தி முன்னோட்டம்
மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நிலவி வரும் தீவிர போர் பதற்றம் காரணமாக, அங்குள்ள இந்திய மாணவர்களின் பாதுகாப்பைக் கருதி மார்ச் 2 ஆம் தேதி (திங்கட்கிழமை) நடைபெறவிருந்த 10 மற்றும் 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகளை மத்திய கல்வி வாரியம் ஒத்திவைத்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, ஓமன், கத்தார், குவைத், பஹ்ரைன் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளில் உள்ள தேர்வு மையங்களுக்கு இந்த அறிவிப்பு பொருந்தும் என்று சிபிஎஸ்இ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பாதிப்பு
மாணவர்களின் கல்வி மற்றும் பாதுகாப்பு பாதிப்பு
வளைகுடா நாடுகளில் வசிக்கும் சுமார் 1.8 கோடி இந்தியர்களில், பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் கல்வி பயின்று வருகின்றனர். உயர்கல்விக்குத் தேவையான இந்த முக்கியமான தேர்வுகள் தற்போது தள்ளி வைக்கப்பட்டுள்ளதால், துபாய் முதல் தோஹா வரை உள்ள இந்திய மாணவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பெரும் கவலையில் உள்ளனர். பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாலும், வான் எல்லைகள் மூடப்பட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாலும் மாணவர்கள் தேர்வு மையங்களுக்குச் செல்வதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
போரின் தீவிரம்
போரின் தீவிரம் மற்றும் வான்வழித் தாக்குதல்கள்
ஈரான் உச்ச தலைவர் அலி காமேனியின் மறைவுக்குப் பிறகு, ஈரான் தனது கிராஷிங் ரெஸ்பான்ஸ் எனும் பெயரில் இஸ்ரேல் மீது சரமாரியாக ஏவுகணைகளை வீசி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 20 க்கும் மேற்பட்ட ஏவுகணைத் தாக்குதல்களை ஈரான் நடத்தியுள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை உறுதிப்படுத்தியுள்ளது. டெல் அவிவ் மற்றும் ஜெருசலேம் போன்ற நகரங்களில் வான்வழித் தாக்குதல் எச்சரிக்கை சைரன்கள் ஒலிக்கப்பட்டு, லட்சக்கணக்கான மக்கள் பதுங்கு குழிகளில் தஞ்சமடைந்துள்ளனர்.
ராணுவ நடவடிக்கை
ஈரான் மற்றும் இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைகள்
சனிக்கிழமை அன்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரானின் 500 க்கும் மேற்பட்ட ராணுவ மற்றும் அணுசக்தி இலக்குகளைத் தாக்கி அழித்தன. சுமார் 200 போர் விமானங்கள் மூலம் 1,200 வெடிமருந்துகள் ஈரானின் தெஹ்ரான் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வீசப்பட்டன. இதில் 200 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்குப் பதிலடியாக ஈரான் தற்போது இஸ்ரேலிய ராணுவத் தலைமையகத்தை இலக்கு வைத்து ஏவுகணைகளை ஏவி வருகிறது.
புதிய தேதிகள்
அடுத்தகட்ட நடவடிக்கைகள் மற்றும் புதிய தேதிகள்
தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ள சூழலில், மாணவர்களுக்கான புதிய தேர்வு தேதிகள் சிபிஎஸ்இயின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விரைவில் வெளியிடப்படும். மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும், பள்ளிகள் மூலம் வழங்கப்படும் அதிகாரப்பூர்வ தகவல்களை மட்டும் பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்காலிகமாக மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வழிகாட்டுதல்களை வழங்கப் பள்ளிகள் திட்டமிட்டுள்ளன.