முதலமைச்சர் வாகனத்தை மறித்துத் திடீர் போராட்டம்! பாதுகாப்பு வளையத்தை மீறி முயன்ற 8 பேர் மீது வழக்குப் பதிவு
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமை செயலகத்திற்கு செல்லும் வழியில், காமராஜர் சாலையில் வைத்து அவரது வாகனத்தை திடீரென மறிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறையினர் உடனடியாகச் செயல்பட்டு, வாகனத்தை நோக்கி ஓடிவந்த நபர்களைத் தடுத்து நிறுத்தி அப்புறப்படுத்தினர். இந்த எதிர்பாராத சம்பவத்தால் முதலமைச்சரின் கான்வாய் வாகனம் சில நொடிகள் நடுவழியிலேயே நிறுத்தப்பட்டது.
வழக்குப் பதிவு
8 பேர் மீது காவல்துறையினர் அதிரடி வழக்குப் பதிவு
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, பாதுகாப்பு வளையத்தை மீறி முதலமைச்சரின் வாகனத்தை மறிக்க முயன்றதாக 8 பேர் மீது பி3 கோட்டை காவல் நிலையப் போலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சட்டவிரோதமாகக் கூடுதல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் மற்றும் பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட 4 முக்கியப் பிரிவுகளின் கீழ் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
விசாரணைக்குப் பிறகு கைது செய்யப்பட்ட 8 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
போராட்டக்காரர்கள் பின்னணி
போராட்டத்தில் ஈடுபட்ட பின்னணியும் கோரிக்கையும்
விசாரணையில், சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் கடந்த மார்ச் மாதம் காவல் துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த இளைஞர் ஆகாஷின் பெற்றோர் ராஜேஷ் கண்ணன், அனந்தி மற்றும் உறவினர்களே இந்த போராட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
சிபிசிஐடி விசாரணையில் குற்றப்பத்திரிகையில் பெயரிடப்பட்ட 6 காவல்துறையினரையும் கைது செய்ய வலியுறுத்தியும், விசாரணையை மாற்றக் கோரியும் மனு அளிக்க முதலமைச்சரை நேரடியாக சந்திக்க முயன்றதாக அவர்கள் தெரிவித்தனர்.
பாதுகாப்பு
தலைமைச் செயலக பகுதியில் பலத்த பாதுகாப்பு
காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் பேரவையில் நடைபெற்ற நாளில் இச்சம்பவம் நடந்துள்ளது.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, முதலமைச்சர் விஜய் சென்று வரும் சென்னை தலைமைச் செயலக வாயில் மற்றும் காமராஜர் சாலைப் பகுதிகளில் கூடுதல் காவல் துறையினர் குவிக்கப்பட்டு, பாதுகாப்புப் பணிகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
பொதுமக்களும் அமைப்பினரும் முதலமைச்சரிடம் மனு அளிக்க உரிய வழிமுறைகளைப் பின்பற்றுமாறு காவல் துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.