ஒவ்வொரு இந்தியரின் குரலாக விளங்கும் பாரத மாதா; ராகுல் காந்தி சுதந்திர தின வாழ்த்து
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 15) 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளதோடு, பாரத மாதா ஒவ்வொரு இந்தியனின் குரலாக விளங்குவதாக தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் (முன்னர் ட்விட்டர்) பதிவில், "பாரத மாதா ஒவ்வொரு இந்தியனின் குரல்! நாட்டு மக்கள் அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள்." என்று கூறினார். ராகுல் காந்தி மேலும், தனது பாரத் ஜோடோ யாத்ரா அனுபவத்தையும் பகிர்ந்து கொண்டார். மேலும் 145 நாள் நடைப்பயணத்தை குமரி கடல் விளிம்பில் தொடங்கி காஷ்மீரின் பனியை அடைந்ததாகக் கூறினார்.
பாரத் ஜோடோ யாத்திரை குறித்து விரிவாக பேசிய ராகுல் காந்தி
தனது பாரத் ஜோடோ யாத்திரை குறித்து விரிவாக பேசிய ராகுல் காந்தி, "கடந்த ஆண்டு நான் நூற்று நாற்பத்தைந்து நாட்கள் நடந்தேன்". "நான் கடலின் ஓரத்தில் தொடங்கி வெப்பம், தூசி மற்றும் மழை வழியாக நடந்தேன். காடுகள், நகரங்கள் மற்றும் மலைகள் வழியாக, என் அன்புக்குரிய காஷ்மீரின் மென்மையான பனியை அடையும் வரை நடந்தேன்." என்று அவர் கூறினார். மேலும் தனது யாத்திரையின்போது சில நாட்களிலேயே வலி ஏற்பட்டாலும், மக்கள் எண்ணிக்கை அதிகமாக ஆக, அது தனக்கு முன்னோக்கிச் செல்ல புதிய ஊக்கத்தைக் கொடுத்ததாகவும் குறிப்பிட்டார்.