Page Loader
பெங்களூரு கஃபே குண்டுவெடிப்பு: வெடிகுண்டு வைப்பதற்கு முன் ரவா இட்லி ஆர்டர் செய்த சந்தேக நபர்

பெங்களூரு கஃபே குண்டுவெடிப்பு: வெடிகுண்டு வைப்பதற்கு முன் ரவா இட்லி ஆர்டர் செய்த சந்தேக நபர்

எழுதியவர் Sindhuja SM
Mar 02, 2024
12:18 pm

செய்தி முன்னோட்டம்

பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபேவில் நடந்த குண்டுவெடிப்பு குறித்த புதிய தகவல் வெளியாகி உள்ளது. அந்த கஃபேவில் வெடிகுண்டை வைப்பதற்கு முன் குற்றவாளி ரவா இட்லியை ஆர்டர் செய்வது சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. 28- 30 வயது மதிக்கத்தக்க அந்த சந்தேக நபர், குண்டு வெடிப்பு நடந்த பகுதிக்கு அருகில் நடமாடுவதை சிசிடிவியில் பார்க்க முடிந்தது. மேலும், அவர் சம்பவத்தின் போது முகமூடி அணிந்திருந்தார். பெங்களூரு ராமேஸ்வரம் கஃபேவில் நேற்று ஒரு குறைந்த தீவிரம் கொண்ட வெடிகுண்டு வெடித்தில், 10 பேர் காயமடைந்தனர். இந்த குண்டு வெடிப்பு மேம்படுத்தப்பட்ட வெடிக்கும் சாதனத்தால் (IED) ஏற்பட்டிருக்கலாம் என்று உளவுத்துறை வட்டாரங்கள் சந்தேகிக்கின்றன.

பெங்களூரு

குண்டுவெடிப்புக்கு முன் சந்தேக நபர் செய்த காரியங்கள் 

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரணை நடந்து வரும் நிலையில், இதில் பயங்கரவாத தொடர்புகள் உள்ளதா என்பதை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். ராமேஸ்வரம் கஃபேவில் ரவா இட்லியை ஆர்டர் செய்த சந்தேக நபர், கூப்பனை மட்டுமே வாங்கினார் என்றும், உணவை சாப்பிடவில்லை என்றும் போலீஸார் தெரிவித்துள்ளனர். உணவகத்தை விட்டு வெளியேறுவதற்கு முன், கஃபே வளாகத்தில் உள்ள ஒரு மரத்தின் அருகே ஒரு சிங்க்கிற்கு கீழ் அவர் ஒரு பையை விட்டுச் சென்றார். அதைத் தொடர்ந்து மதியம் 1:00 மணியளவில் குண்டுவெடிப்பு ஏற்பட்டது. சந்தேக நபர் பேருந்து மூலம் கஃபேவுக்கு வந்திருக்கலாம் என அதிகாரிகள் கருதுகின்றனர். முக அடையாளம் காணும் மென்பொருளை பயன்படுத்தி சந்தேக நபரைக் கண்டுபிடிக்க அதிகாரிகள் முயற்சி வருகின்றனர்.