Loading...
வானில் திடீரென 300 அடி கீழே சரிந்த விமானம்! ஏர் இந்தியா புகெட் விமானத்தில் தொடர் ஹைட்ராலிக் கோளாறு
ஏர் இந்தியா புகெட் விமானத்தில் ஏற்பட்ட ஹைட்ராலிக் கோளாறு குறித்து விசாரணையில் புதிய தகவல்

வானில் திடீரென 300 அடி கீழே சரிந்த விமானம்! ஏர் இந்தியா புகெட் விமானத்தில் தொடர் ஹைட்ராலிக் கோளாறு

எழுதியவர் Sekar Chinnappan
Sep 04, 2026
12:15 pm

செய்தி முன்னோட்டம்

தாய்லாந்தின் புகெட்டிலிருந்து டெல்லி நோக்கி 137 பயணிகளுடன் பயணித்த ஏர் இந்தியா ஏர்பஸ் ஏ320 விமானத்தில், ஒரே நேரத்தில் பச்சை, நீலம் மற்றும் மஞ்சள் ஆகிய மூன்று ஹைட்ராலிக் அமைப்புகளிலும் அழுத்தம் குறைந்து திடீர் கோளாறு ஏற்பட்டதாக விமான விபத்து விசாரணை அமைப்பு தனது முதற்கட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் 4 அன்று நடைபெற்ற இந்த சம்பவத்தின் போது, தானியங்கி இயக்கம் ரத்தாகி, விமானம் கட்டுப்பாட்டை இழந்து வானில் சுமார் 300 அடி தூரம் வரை கீழே சரிந்து பெரும் ஆபத்தை ஏற்படுத்தியது.

உட்புற சேதங்கள்

பயணிகள் காயம் மற்றும் விமானத்தின் உட்புற சேதங்கள்

விமானம் திடீரெனக் கீழே சரிந்த போது, இருக்கை பட்டை அணியாத நிலையில் இருந்த பயணிகள் மற்றும் விமானப் பணிப்பெண்கள் பலர் தூக்கி வீசப்பட்டனர்.

இதில் 20 பயணிகள் மற்றும் 4 பணிப்பெண்கள் என மொத்தம் 24 பேர் காயமடைந்தனர்.

இதில் கடுமையான காயமடைந்த 4 பேர் டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

மேலும், விமானத்தின் உட்புறக் கூரை பேனல்கள், கைகழுவும் அறை சாதனங்கள், அவசரக் கதவு பிடிகள் மற்றும் இருக்கைகள் பலத்த சேதமடைந்தன.

தரையிறக்கம்

அவசர திருப்பத்தைத் தவிர்த்து டெல்லியில் தரையிறக்கம்

விமானத்தில் இத்தகைய மோசமான அவசர நிலை ஏற்பட்ட போதிலும், அருகில் உள்ள வேறு எந்த விமான நிலையத்திற்கும் திருப்பாமல், விமானிகள் விமானத்தை திட்டமிட்டபடி டெல்லிக்கே கொண்டு செல்ல முடிவெடுத்தனர்.

பின்னர் டெல்லி விமானக் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்புகொண்டு மருத்துவ முன்னுரிமை கோரப்பட்டது.

காலை 11 மணி அளவில் டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் விமானம் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டு, பயணிகள் மருத்துவ சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.

ADVERTISEMENT

விசாரணை 

விமானியின் போதைப்பொருள் பரிசோதனை மற்றும் தொடர் விசாரணை

இந்த சம்பவம் குறித்துத் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், விமானத்தின் முதன்மை விமானிக்கு நடத்தப்பட்ட போதைப்பொருள் பரிசோதனையில், தடை செய்யப்பட்ட மனோரீதியான பொருள் இருந்ததாக சந்தேகிக்கப்படும் முடிவுகள் வந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், ஜூலை 28 முதலே அந்த விமானத்தின் பவர் டிரான்ஸ்ஃபர் யூனிட்டில் தொழில்நுட்பப் பராமரிப்புக் கோளாறு இருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

ADVERTISEMENT