
9 லட்சம் வாகனங்களுக்கு ஏப்ரல் 1 முதல் தடை - நிதின் கட்கரி அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
வரும் 2070ம் ஆண்டிற்குள் மத்திய அரசு கார்பன் வாயு வெளியேற்றம் இல்லாத நிலையை அடைய பல திட்டங்களை வகுத்து வருகிறது.
அதில் ஓர் பகுதியாக, காற்று மாசு ஏற்படுத்தும் வாகனங்களை பயன்பாட்டில் இருந்து நீக்குவதற்கான வாகன அழிப்பு கொள்கையை பிரதமர் மோடி அவர்கள் கடந்த 2021ம் ஆண்டு அறிமுகப்படுத்தினார்.
இதன் படி, வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் 15 ஆண்டுகள் பழமையான அரசு வாகனங்கள் பயன்பாட்டில் இருந்து நீக்கப்படும் என்று மத்திய அரசின் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி அவர்கள் அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
சுற்றுசூழல் பாதிப்பு
மத்திய மற்றும் மாநில அரசின் வாகனங்கள் பயன்பாட்டிலிருந்து நீக்கப்படும்
இந்த அறிவிப்பின் படி, மத்திய மற்றும் மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் உள்ள பழமையான வாகனங்கள் ஏப்ரல் மாதம் 1ம் தேதி முதல் பயன்படுத்தப்படாது.
இந்த அறிவிப்பு குறித்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியதாவது, அரசு பேருந்துகள் உள்ளிட்ட 9 லட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் பயன்பாட்டில் இருந்து நீக்கப்பட்டு, அதற்கு பதில் புதிய வாகனங்கள் வாங்கப்படும் என்று தெரிவித்தார்.
மேலும், சுற்றுசூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத மெத்தனால், எத்தனால் மற்றும் மின்சாரம் மூலம் இயங்கும் வாகனங்களை அதிகளவில் பயன்பாட்டிற்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.