கனமழையால் டெல்லி விமான நிலையத்தின் டெர்மினல் 1ல் மேற்கூரை இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு, மேலும் சிலர் படுகாயம்
டெல்லியில் பெய்து வரும் கனமழையால், விமான நிலையத்தின் டெர்மினல் 1ல் உள்ள மேற்கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்ததாகவும், மேலும் சிலர் படுகாயம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது. காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். "இன்று அதிகாலையில் இருந்து பெய்த கனமழையின் காரணமாக, டெல்லி விமான நிலையத்தின் டெர்மினல் 1-ன் பழைய டிபார்ச்சர் ஃபோர்ட்டிகோவில் உள்ள விதானத்தின் ஒரு பகுதி அதிகாலை 5 மணியளவில் இடிந்து விழுந்தது. காயங்கள் பதிவாகியுள்ளன. மேலும் அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மருத்துவ உதவிகளையும் வழங்க அவசரகால பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். பாதிக்கப்பட்டுள்ளது" என்று டெல்லி விமான நிலையம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
விமான நிலைய மேற்கூரை விழுந்த பகுதி
விமான சேவைகள் பாதிப்பு
டெர்மினல்-1 உள்நாட்டு விமானச் செயல்பாடுகளை மட்டுமே கொண்டுள்ளது. டெல்லி விமான நிலையத்தில் T1, T2 மற்றும் T3 ஆகிய மூன்று முனையங்கள் உள்ளன. சரிவுக்குப்பிறகு, டெர்மினல் 1-ல் இருந்து அனைத்துப் புறப்பாடுகளும் பிற்பகல் 2 மணி வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும் பாதுகாப்பு நடவடிக்கையாக செக்-இன் கவுன்டர்கள் மூடப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். நள்ளிரவு முதல் 16 புறப்படும் விமானங்களும், 12 வருகை விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில், டெல்லி மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் உள்ள பல பகுதிகள் கடுமையாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. டெல்லியில் காலை 5.30 மணி நிலவரப்படி சப்தர்ஜங்கில் 153.7 மிமீ மற்றும் பாலம் விமான நிலையத்தில் 93 மிமீ மழை பெய்துள்ளது.