Page Loader
பொது மக்களை சரமாரியாக சுட்ட பயங்கரவாதிகள்: காஷ்மீரில் பரபரப்பு!
பயங்கரவாத தாக்குதலால் 4 பேர் பலி(படம்: India Today)

பொது மக்களை சரமாரியாக சுட்ட பயங்கரவாதிகள்: காஷ்மீரில் பரபரப்பு!

எழுதியவர் Sindhuja SM
Jan 02, 2023
12:33 pm

செய்தி முன்னோட்டம்

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ரஜோரி என்ற பகுதியில் நேற்று(ஜன:1) இரவு வீடுகளுக்குள் புகுந்த பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். இதனால், பொது மக்களில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த டிசம்பர் 28ஆம் தேதி 4 பயரங்கவாதிகளைப் பாதுகாப்பு படையினர் சுட்டு கொன்றனர். சுட்டு கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிடம் இருந்து AK ரக துப்பாக்கிகள்(7), M4 ரக துப்பாக்கி(1), பிஸ்டல்கள்(3) மற்றும் ஏராளமான வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், சம்பவத்தின் போது தப்பி ஓடிய பிற பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் தேடி வந்தனர். இந்நிலையில், பயங்கரவாதிகள் பொது மக்களை தாக்கியதில் ரஜோரி பகுதியில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். டாங்கிரி பகுதியில் 6 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பரபரப்பு

இறந்தவர்கள் குடும்பங்களுக்கு இழப்பீடு!

இதையடுத்து, காஷ்மீரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது போன்ற தாக்குதல்கள் மீண்டும் நடந்துவிட கூடாது என்பதற்காக அந்த பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பயங்கரவாத செயல்களை எதிர்த்து பொதுமக்கள் டாங்கிரி பகுதியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் பொது மக்களை பாதுகாக்க தவறிவிட்டதாக குற்றம்சாட்டப்படுகிறது. இதற்கிடையில், பொது மக்கள் மீது துப்பாக்கி சூடு நடைபெற்ற அதே இடத்தில் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதில் இருவர் காயமடைந்துள்ளனர். உயிழிந்த நான்கு பேரின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்றும் அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசாங்க வேலை வழங்கப்படும் என்றும் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா அறிவித்திருக்கிறார்.