
குடும்பத்தினருடன் ஊட்டி ரயிலில் பயணம் செய்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி
செய்தி முன்னோட்டம்
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தன் குடுமபத்தினருடன் இன்று(ஜூன் 7) உதகையில் இருந்து குன்னூர் வரை ரயிலில் பயணித்தார். உதகையில் நடைபெற்ற துணைவேந்தர் மாநாட்டை தொடங்கி வைப்பதற்காக ஆளுநர் ஆர்.என்.ரவி ஜூன் 3ஆம் தேதி உதகைக்கு சென்றார். அங்கு, தேசிய கல்விக் கொள்கை 2020ஐ அமல்படுத்துதல் மற்றும் உயர்கல்வி பாடப்புத்தகங்களை தமிழ் மொழியில் மொழிபெயர்ப்பது தொடர்பான துணைவேந்தர் மாநாட்டுக்கு அவர் தலைமை தாங்கினார். அதன்பிறகு, உலக சுற்றுச்சூழல் தினத்தன்று ஆளுநர் ரவி மற்றும் அவரது மனைவி லக்ஷ்மி ரவி ஆகியோர் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மாநாட்டில் பங்கேற்ற முக்கிய விருந்தினர்களுடன் இணைந்து உதகை ராஜ்பவனில் மரக்கன்றுகளை நட்டனர்.
details
ஆளுநரை உதகை ரயில் நிலையத்திற்கு வரவேற்ற ரயில்வே உதவி இயக்குநர் சரவணன்
இதனையடுத்து, இன்று அவர் தனது குடும்பத்தினருடன் உதகையில் இருந்து குன்னூர் வரை மலை ரயில் பாதையில் பயணித்தார். இதே ரயில் பாதையில் தான் கேத்தி பள்ளத்தாக்கு, படகு இல்லம், குகை போன்ற ஊட்டியின் பல சுற்றுலா தலங்கள் அமைந்துள்ளன. அதையெல்லாம் பார்த்து அவர் பரவசமடைந்தார். இந்த ரயிலில் பயணிப்பதற்காகவே குன்னூர் சென்ற ஆளுநர், அங்கேயே சாப்பிட்டுவிட்டு கார் மூலம் உதகை ராஜ்பவனுக்கு திரும்பினார். உதகை ரயிலில் ஆளுநர் ஏறுவதற்கு முன், அவரை ரயில்வே உதவி இயக்குநர் சரவணன் வரவேற்று ஒரு புத்தகத்தை பரிசாகக் கொடுத்தார். ஆளுநர் ரயிலில் பயணிப்பதற்கு முன், மோப்ப நாய் மூலம் ரயில் சோதனையிடப்பட்டது. அந்த ரயிலில் பயணித்த பயணிகளும் சோதனைக்கு உட்படுத்தபட்டனர்.