ஹைதராபாத்: 1,000 ஆண்டுகள் பழமையான சமண தூண்கள் கண்டுபிடிப்பு
கிபி 9-10 ஆம் நூற்றாண்டுகளில், ஒரு சமண மடாலயம் ஹைதராபாத் அருகே இருந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. ஹைதராபாத் அருகே உள்ள ஒரு கிராமத்தில் சமண தீர்த்தங்கரர் சிற்பங்கள் மற்றும் கல்வெட்டுகள் கொண்ட சதுர தூண்கள் கண்டுபிக்கப்பட்டுள்ளது. இளம் தொல்பொருள் ஆய்வாளரும், பாரம்பரிய ஆர்வலருமான ஸ்ரீநாத் ரெட்டி, இந்த தொல்பொருட்களை கண்டுபிடித்துள்ளார். ரங்கா ரெட்டி மாவட்டத்தின் மொய்னாபாத் மண்டலத்தில் உள்ள எனிகேபள்ளி கிராமத்தில் இந்த சமண தூண்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஆய்வு செய்த பிரபல தொல்லியல் ஆய்வாளரும் முன்னாள் அரசு அதிகாரியுமான சிவநாகி ரெட்டி, "இவை கிபி 9-10 ஆம் நூற்றாண்டுகளை சேர்ந்தவை" என்று கூறியுள்ளார்.
ஆய்வாளர் சிவநாகி ரெட்டி மேலும் கூறி இருப்பதாவது:
ரங்கா ரெட்டி மாவட்டத்தின் மொய்னாபாத் மண்டலத்தில் உள்ள எனிகேபள்ளி கிராமத்தில் இரண்டு சமண தூண்கள் கிடைத்துள்ளன. இதில் ஒரு தூண் க்ரானைட்டால் ஆனது, மற்றொன்று கருங்கல்லில் செய்யப்பட்டிருக்கிறது. இந்த தூண்களில் சமண தீர்த்தங்கரர்களின் உருவங்கள் பொறிக்கப்பட்டிருக்கிறது. ஆதிநாதர், நேமிநாதர், பார்ஸ்வநாதர் மற்றும் வர்த்தமான மகாவீரர் ஆகியோர் இந்த தூண்களின் நான்கு பக்கங்களிலும் தியானத்தில் அமர்ந்துள்ளனர். தூண்களின் மேல் பகுதி கீர்த்திமுகங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்த தூண்களில் தெலுங்கு-கன்னட எழுத்துக்களில் எழுதப்பட்டுள்ளது. ஆனால், அவற்றை வாசிக்க முடியவில்லை. ஒரே ஒரு பகுதியில் 'ஜனின பசதி'(மடம்) என்று எழுதப்பட்டிருப்பது மட்டும் நன்றாக தெரிகிறது. ஜனின பசதி என்னும் மடாலயம் சிலுக்குருவுக்கு அருகில் அமைந்துள்ள ஒரு கிராமத்தில் இருக்கிறது. என்று கூறியுள்ளார்.