ஹரியானா, டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் நிலநடுக்கம்
டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று மாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இதனால் பீதியடைந்த மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். டெல்லியின் அண்டை மாநிலமான ஹரியானாவின் ஃபரிதாபாத்தில் இன்று மாலை 4:08 மணியளவில் 3.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக நிலநடுக்கத்திற்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது. ஃபரிதாபாத்தில் இருந்து ஒன்பது கிமீ தொலைவில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம், 10 கிமீ ஆழத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் உயிர் சேதமோ பொருள் சேதமோ ஏற்பட்டதாக இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. கடைசியாக, அக்டோபர்-3ஆம் தேதி டெல்லியில் நில அதிர்வு ஏற்பட்டது. நேபாளத்தில் ஏற்பட்ட தொடர் நிலநடுக்கங்களால் அப்போது டெல்லி உள்ளிட்ட வட இந்திய பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டது.