மகளின் பிரிவை தாங்க முடியாத விஜய் ஆண்டனி மனைவியின் உருக்கமான பதிவு
கடந்த செப்டம்பர் மாதம் நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி மூத்த மகள் மீரா தற்கொலை செய்து கொண்டார். தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படிக்கும் இவர் மன அழுத்தம் காரணமாகவே தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியானது. இந்த செய்தி ஒட்டுமொத்த சினிமா உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்நிலையில் மீராவின் தாயும், விஜய் ஆண்டனியின் மனைவியுமான பாத்திமா, தனது மகளின் மரண செய்தியில் இருந்து தான் இன்னும் மீளவில்லை என்று உருக்கமான ஓர் பதிவினை மகளின் புகைப்படத்துடன் இணைத்து எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார்.
விஜய் ஆண்டனியை டேக் செய்து பதிவிட்ட பாத்திமா ஆண்டனி
தனது மகள் குறித்த பதிவில் அவர், 'நீ எங்களுடன் 16 ஆண்டுகள் தான் இருப்பாய் என்று முன்னதாகவே தெரிந்திருந்தால் உன்னை என் அருகிலேயே வைத்து கொண்டிருந்திருப்பேன். அந்த நிலவையம், சூரியனையும் கூட உனக்கு காட்டியிருக்க மாட்டேன்' என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், தன்னால் மீராவின் பிரிவை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றும், அவரின் நினைவால் தினமும் இறந்து கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து, 'நீ இல்லாமல் என்னால் வாழ முடியாது. அம்மா, அப்பாவிடம் திரும்ப வந்துவிடு. லாரா உன் வருகைக்காக காத்திருக்கிறாள். லவ் யூ தங்கம்' என்றும் பதிவு செய்துள்ளார். விஜய் ஆண்டனியை டேக் செய்து இதனை அவர் பதிவிட்டுள்ளார்.