ஏழாம் அறிவு படத்தில் இடஒதுக்கீட்டுக்கு எதிரான வசனம் - உதயநிதி ஸ்டாலின் வருத்தம்
செய்தி முன்னோட்டம்
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் சூர்யா, ஸ்ருதிஹாசன் நடித்து, கடந்த 2011ம் ஆண்டில் வெளியான படம் தான் 'ஏழாம் அறிவு'.
ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பில் தயாரிக்கப்பட்ட இப்படம், நல்ல வரவேற்பினை பெற்றது.
இப்படம் வெளியாகி தற்போது 12 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், இதில் இடம்பெற்றுள்ள இடஒதுக்கீட்டிற்கு எதிரான வசனம் குறித்து உதயநிதி ஸ்டாலின் மனம் திறந்து பேசியுள்ளார்.
உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் 'மாமன்னன்' என்னும் படத்தில் நடித்துள்ளார்.
இப்படம் வரும் ஜூன்.,29ம்தேதி வெளியாகவுள்ளது.
இந்நிலையில் இப்படத்திற்கான நேர்காணல் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய உதயநிதி ஸ்டாலின், "நான் தயாரித்த 'ஏழாம் அறிவு' படத்தில் இடஒதுக்கீட்டிற்கு எதிராக ஸ்ருதிஹாசன் பேசும் வசனத்தினை வைத்திருக்க கூடாது" என்று கூறியுள்ளார்.
வசனம்
சூர்யா கூறியதை செய்திருக்க வேண்டும் - உதயநிதி ஸ்டாலின்
மேலும் அவர், "அந்த வசனம் படத்தில் இடம்பெற்றதற்காக நான் முருகதாஸ் அவர்களை குறைக்கூறவில்லை".
"இந்த வசனம் இடம்பெறும் பொழுது, படப்பிடிப்பின் போதோ, சீன் பேப்பரையோ நானும் சூர்யாவும் பார்க்கவில்லை".
"டப்பிங் பேசும் போதும் சூர்யா அங்கில்லை".
"படம் வெளியாவதற்கு முன்னர் முழு படத்தினை பார்த்த நடிகர் சூர்யா, என்னை தொடர்புக்கொண்டு அந்த வசனத்தினை நீக்கி விடலாம் என்று கூறினார்".
"அதற்கு நான், வசனம் தானே! இருக்கட்டும்!" என்று கூறிவிட்டேன்.
"அப்போது எனக்கு இருந்த அரசியல் புரிதல் அவ்வளவுதான். ஆனால் சூர்யாவிற்கு அப்போதே அரசியல் புரிதல் இருந்துள்ளது".
"தற்போது யோசித்து பார்த்தால், சூர்யா கூறியவாறு அந்த வசனத்தினை படத்தில் இருந்து நீக்கி இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது" என்று கூறியுள்ளார்.