தடைகளை மீறி 37 நாடுகளில் வெளியாகப்போகும் 'தி கேரளா ஸ்டோரி'
இந்தியா முழுவதும், சென்ற வாரம் வெளியானது 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம். திரைப்படம் வெளியாவதற்கு முன்னரே நாடு முழுவதும் அதை பற்றி பலவிதமான செய்திகள் வெளியாகின. சில மாநிலங்களில், மதக்கலவரங்கள் உண்டாகலாம் உளவு துறை எச்சரிக்கையும் விடப்பட்டது. இந்த திரைப்படம், சென்ற வெள்ளிக்கிழமை வெளியான நிலையில், நாடு முழுவதும் திரையரங்குகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. படம் வெளியான ஒரே நாளிலேயே, தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களில் அந்தத் படத்திற்கு தடை போடப்பட்டது. பாஜக ஆளும் மாநிலங்கள் தவிர மற்ற மாநிலங்களில் இந்த படம் வெளியிட கண்டனங்கள் வலுத்த நிலையில் அரசியல் தலைவர்களும் இது குறித்து காட்டமான கருத்துகளை பரிமாறி வருகின்றனர்.
வெளிநாடுகளில் வெளியாகப்போகும் 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம்
இந்தியாவில் ஒரு சில மாநிலங்களில் இந்த திரைப்படத்திற்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. கேரளாவை சேர்ந்த இந்து பெண்கள், 32 ஆயிரம் பேர், மூளை சலவை செய்யப்பட்டு, மத மாற்றம் செய்யப்பட்டு, பின்னர் தீவிரவாத கூட்டத்திற்குள் சேர்க்கப்படுகின்றனர் என்பதுதான் படத்தின் மூலகதை. இந்த படத்தில் அடா சர்மா, சித்தி இட்னானி மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படி பல தடைகள் நம் நாட்டில் இருந்த போதும், இந்த திரைப்படத்தை, 37 நாடுகளில், நாளை (மே 12.,) வெளியிட திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளனர். இது குறித்து படத்தின் நாயகி, அடா சர்மா தனது சமூகவலைதள பக்கமான ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.