"எனக்கு தெரியாமலேயே கருப்பையை அகற்றினார்கள்!": பாடகர் உதித் நாராயணன் மீது முன்னாள் மனைவி புகார்
செய்தி முன்னோட்டம்
பிரபல பாலிவுட் பின்னணி பாடகர் உதித் நாராயணன் மீது, அவரது முதல் மனைவி ரஞ்சனா, பிகார் மாநில மகளிர் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். இதில் உதித் நாராயணன், அவரது இரண்டாவது மனைவி தீபா மற்றும் அவரது இரண்டு சகோதரர்கள் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. ரஞ்சனா அளித்துள்ள புகாரில், "1984 டிசம்பர் 7 அன்று எனக்கும் உதித் நாராயணனுக்கும் முறைப்படி திருமணம் நடந்தது. ஆனால், மும்பை சென்ற அவர் எனக்கு தெரியாமல் தீபா என்ற பெண்ணை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்" என்றும் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் குறித்து இதுவரை உதித் நாராயணன் தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமான விளக்கம் எதுவும் அளிக்கப்படவில்லை.
புகார்
கருப்பையை அகற்றியதாக புகார்
"1996-ம் ஆண்டு டெல்லியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு என்னை அழைத்துச் சென்றனர். அங்கு எனக்குத் தெரியாமலேயே எனது கருப்பையை அகற்றும் அறுவை சிகிச்சையை செய்துள்ளனர். இந்த விஷயம் பல ஆண்டுகளுக்குப் பிறகே எனக்குத் தெரியவந்தது" என அவர் தனது புகாரில் தெரிவித்துள்ளார். "அவர்கள் என்னை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் துன்புறுத்தினார்கள். எனக்கு நிதி உதவி வழங்குவதாக பலமுறை வாக்குறுதி அளித்தும், இதுவரை அதை நிறைவேற்றவில்லை" எனத்தெரிவித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் உதித் நாராயணன் மற்றும் தொடர்புடையவர்கள் மீது FIR பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று காவல் நிலைய அதிகாரி தெரிவித்துள்ளார்.