முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.1 லட்சம் வழங்கினார் கவிஞர் வைரமுத்து
இந்த வார தொடக்கத்தில் சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளை தாக்கிய மிக்ஜாம் புயலால், சென்னை மாநகரமே வெள்ளத்தில் மூழ்கியது. இதனை தொடர்ந்து, தற்போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில், ஒவ்வொரு பிரபலங்களாக தங்களால் முடிந்த நிதியுதவியை செய்து வருகின்றனர். அந்த வரிசையில், சென்னையில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, சமீபத்தில் நிவாரண உதவிகளை கேபிஒய் பாலா வழங்கி வருகிறார். நடிகர் சூரியா சார்பில் 10 லட்சம் ரூபாய் நிவாரண நிதியுதவியாக சில நாட்களுக்கு முன் வழங்கப்பட்டது.
கவிஞர் வைரமுத்துவின் ட்விட்டர் பதிவு
இந்நிலையில், தற்போது கவிஞர் வைரமுத்து முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.1 லட்சம் வழங்கியுள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் அவர், "'தண்ணீர் தண்ணீர் எங்கணும் தண்ணீர் குடிக்கத்தான் இல்லை ஒருதுளி' எனும் ஆங்கிலக் கவிதை நினைவின் இடுக்கில் கசிகிறது வீட்டுக்குத் தண்ணீர் இல்லை என்பது சிறுதுயரம் வீட்டுக்குள்ளேயே தண்ணீர் என்பது பெருந்துயரம் விடியும் வடியும் என்று காத்திருந்த பெருமக்களின் துயரத்தில் பாதிக்கப்படாத நானும் பங்கேற்கிறேன் என் கடமையின் அடையாளமாக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ஒரு லட்ச ரூபாய் வழங்குகிறேன் பொருள்கொண்டோர் அருள்கூர்க சக மனிதனின் துயரம் நம் துயரம் இடர் தொடராதிருக்க இனியொரு விதிசெய்வோம்; அதை எந்தநாளும் காப்போம்" என்று கூறியுள்ளார்.